செய்திகள்,திரையுலகம் குபீர் (2014) திரை விமர்சனம்…

குபீர் (2014) திரை விமர்சனம்…

குபீர் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஐந்து நண்பர்கள் தாங்கள் தங்கி இருக்கும் அறையில் சனிக்கிழமை இரவு விலையுயர்ந்த மதுபானம் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு பார்ட்டி கொண்டாடுகிறார்கள். அப்போது ஒவ்வொருவரும் உலக விஷயங்களை பற்றி பேசிக் கொள்கிறார்கள். புரட்சி, சினிமா, முதல் உலகப் போர், குறும்பு, அரசியல், உணவு பழக்கம், பேய், பிசாசு கதைகள் இப்படி பல விஷயங்களை பற்றி சுவையாக உரையாடுகிறார்கள்.அதுமட்டுமில்லாமல், அந்த அறைக்குள்ளேயே விளையாட்டு, உடற்பயிற்சி, பாட்டுக்கு ஆட்டம் என கேளிக்கைக் கூத்துக்களையும் அரங்கேற்றுகின்றனர். இப்படியாக அந்த ஒரு நாள் இரவை அவர்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதை முழுப்படமாக எடுத்திருக்கிறார்கள்.

வணிக ரீதியாக ஒரு வெற்றிப்படத்துக்கு இருக்கிற விதிகளை தகர்த்தெறிந்து படத்தை இயக்கியிருக்கிறார் திலீப். இப்படத்தில் கவர்ச்சி காட்டவோ, கண்ணீர் விடவோ ஒரு கதாநாயகி கூட இல்லை. படத்தின் ஆரம்பத்தில் ஓரிரு காட்சிகளில் தான் பெண்கள் வருகிறார்கள். அதன் பிறகு ஒரு பெண்ணைக் கூட திரையில் பார்க்க முடியவில்லை.அதே போல், இந்த படத்தின் முதல் சில காட்சிகளைத் தவிர, முழுப்படமும் ஒரு வீட்டுக்குள்ளே நிகழ்கிறது. அது கொஞ்சம் போரடிக்கிறது. சுவாரஸ்யமான விஷயங்களை பேசிக்கொண்டிருந்தாலும், ஒரே இடத்தில் அமர்ந்து பேசுவதைத்தான் ரசிக்க முடியவில்லை.
படத்தில் நண்பர்களாக நடித்திருக்கும் திலீப், தமிழ், பிரதாப், வொய்ட் ரவி, பிரபு எல்லோரும் பேசிப்பேசியே நம்மை கடுப்பேத்துகிறார்கள். இவர்களுக்கும் வீடு கொடுத்திருக்கும் புரொபசர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஒரு காட்சியில் மட்டும் வந்தாலும் கலகலப்பாக நடித்து கலக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் மூலம் நல்ல கருத்துக்களையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதை கதையோட்டத்தில் சிறப்பாக கொண்டு போயிருக்கிறார். குறிப்பாக, இறுதிக்காட்சியில் அனைவரும் நன்றாக மது அருந்தியிருக்கிறார்கள். அனைவரும் வெளியில் செல்லவேண்டும். அப்போது அவர்களில் ஒருவனின் தம்பி இவர்களது அறைக்கு வருகிறான். அவனை காரை ஓட்ட சொல்கிறார்கள். இந்த இடத்தில் மது அருந்திவிட்டு கார் ஓட்டக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக இந்த காட்சியை வடிவமைத்திருப்பது இயக்குனர் திலீப்பின் சிறப்பு. இது போன்ற சிறு சிறு கருத்துக்களை ஆங்காங்கே சொல்லி படம் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கிறார். முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம் பாதி கொஞ்சம் போரடிக்கிறது.சந்தோஷ் ஸ்ரீராம் ஒளிப்பதிவு பெரிதாக எடுபடவில்லை. விஷால்-ஆதித்யாவின் இசை பரவாயில்லை. ஏதோ குறும்படம் பார்த்த உணர்வை தான் இப்படம் கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘குபீர்’ நல்ல முயற்சி………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி