அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம்!…

பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம்!…

பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம்!… post thumbnail image
புதுடெல்லி:-நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்தார். அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவை மேம்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக ஒபாமா அழைப்பை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து மோடியின் அமெரிக்க பயணத் திட்டம் வகுக்கப்பட்டது.அமெரிக்காவில் மொத்தம் 5 நாட்கள் பிரதமர் நரேந்திர மோடி தங்கி இருந்து சுமார் 50 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வகையில் அவரது பயணத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலில் 26ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட திட்டமிட்டிருந்தார். ஆனால் ஜெர்மனி தலைநகர் பிராங் பர்ட்டில் இரவில் விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஒரு நாள் முன்னதாக புறப்படும் வகையில் மோடியின் பயணத் திட்டம் மாற்றப்பட்டது.அதன்படி பிரதமர் நரேந்திரமோடி இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். ‘‘ஏர் இந்தியா ஒன்’’ என்ற சிறப்பு தனி விமானத்தில் அவர் செல்கிறார். அவருடன் மத்திய மந்திரிகள், உயர் அதிகாரிகள் சுமார் 100 பேர் உடன் செல்கிறார்கள்.நாளை காலை மோடி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு சென்று சேர்வார். முதலில் அவர் அந்த நகரில் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட இரட்டை கோபுர இடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துவார்.
பிறகு ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதைத் தொடர்ந்து வங்கதேச அதிபர் ஹசீனா, நேபாள பிரதமர் சுஷில் கொய்ரலா, இலங்கை அதிபர் ராஜபக்சே ஆகியோரை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
ராஜபக்சேயுடன் பேச்சு நடத்தும்போது ஈழத் தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேசக் கூடும். அது போல வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பேசும் போது நதிநீர் பிரச்சினை, எல்லைப் பிரச்சினை மற்றும் தீவிரவாதிகளை ஒடுக்க இணைந்து பணியாற்றுவது குறித்து அவர்கள் விவாதிப்பார்கள் என்று தெரிகிறது.

மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் மோசடியில் அந்த பணம் வங்கதேச தீவிரவாதிகளுக்கு கொடுக்கப்பட்டதாக ஹசீனா கூறி வருகிறார். இதற்கான ஆதாரங்களை அவர் அமெரிக்காவில் நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசும் போது நேரில் கொடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.அண்டை நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்பு முடிந்ததும் பிரதமர் மோடி, நியூயார்க் நகர முன்னாள் மேயரும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முன்னோடியுமான பிரபல தொழில் அதிபர் ப்ளூம் பேர்க்கை சந்தித்து பேசுகிறார். பிறகு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்கும் கூட்டத்தில் மோடி பேச உள்ளார்.28–ந்தேதி அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனை மோடி சந்திக்க திட்டமிட்டுள்ளார். அன்று மேலும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு வாஷிங்டன் புறப்பட்டு செல்வார்.
29, 30–ந்தேதிகளில் வாஷிங்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொள்வார். 29–ந்தேதி காலை அமெரிக்க தொழில் துறையில் புரட்சி ஏற்படுத்திய கூகுள், போயிங் விமான நிறுவனம், ஜெனரல் எலக்ட்ரிக் உள்பட 15 முன்னணி நிறுவன தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசுவார். அந்த தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளிப்பார்.இது தவிர 6 முக்கிய வர்த்தக நிறுவனத் தலைவர்களுடன் தனித்தனியே பேச்சு நடத்துவார். அன்றிரவு அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடிக்கு ஒபாமா விருந்து கொடுப்பார்.

30–ந்தேதியும் ஒபாமாவை பிரதமர் மோடி சந்தித்து பேசுவார். அப்போது ஏராளமான திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகும். இதன் மூலம் அமெரிக்கா – இந்தியா நட்பில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என்று கருதப்படுகிறது. இது தவிர ஏற்றமிகு இந்தியாவை உருவாக்க திட்டமிடும் மோடியின் நோக்கங்களுக்கு அமெரிக்க உதவும் என்று தெரிகிறது. ஒபாமாவை சந்தித்த பிறகு 30–ந்தேதியே பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டு வருவார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி