அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இந்துக்களின் புனித தலமான கைலாய மலை, மானசரோவர் ஏரி புதிய பாதைக்கு சீனா அனுமதி!…

இந்துக்களின் புனித தலமான கைலாய மலை, மானசரோவர் ஏரி புதிய பாதைக்கு சீனா அனுமதி!…

இந்துக்களின் புனித தலமான கைலாய மலை, மானசரோவர் ஏரி புதிய பாதைக்கு சீனா அனுமதி!… post thumbnail image
புதுடெல்லி:-இந்துக்களின் புனித தலமான கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரி சீன எல்லையில் திபெத் பகுதியில் அமைந்துள்ளது. 19 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ள கைலாய மலைக்கும், மானசரோவர் ஏரிக்கும் இந்துக்கள் சென்று வருவதை மிகப்பெரும் புண்ணியமாக கருதி வருகிறார்கள். இந்த பகுதிக்கு இதுவரை உத்தரகாண்ட் மாநிலம் வழியாக பக்தர்கள் சென்று வந்தனர். இந்த பாதையில் செல்வதற்கு பக்தர்கள் மலைச்சரிவுகளிலும், காடு, மேடுகளிலும் நடந்து தான் செல்ல வேண்டிய நிலை இருந்துவந்தது. வயதான பக்தர்கள் கோவேறு கழுதை மீது பயணம் செய்வார்கள். மழைக்காலங்களில் இந்த பாதையில் பக்தர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

உத்தரகாண்ட், லிபு ஏரி வழியாக செல்லும் அந்த பாதை கடந்த ஆண்டு பெய்த பலத்த மழை, வெள்ளத்தில் மிகவும் சேதமடைந்தது. இதனால் கடந்த ஆண்டு கைலாய மலைக்கு சென்ற அதிகாரப்பூர்வமான பக்தர்களின் எண்ணிக்கை 51 ஆக குறைந்தது.ஆனால் சீன பகுதியில் இதற்கு ஒரு மாற்றுப்பாதையும் இருக்கிறது. அந்த பாதையில் கைலாய மலைக்கு செல்லும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அரசு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தது. வருடந்தோறும் ஏப்ரல் மாதம் பீஜிங்கில் நடைபெறும் இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான எல்லை பிரச்சினை பேச்சுவார்த்தையின் போது இந்த கோரிக்கையும் எழுப்பப்படுவது வழக்கமாக இருந்தது.இந்நிலையில் இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜின்பிங் நேற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் கைலாய மலை, மானசரோவர் ஏரிக்கு செல்வதற்கான புதிய பாதையை திறப்பதற்கு சீன அதிபர் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இந்த புதிய பாதையானது சிக்கிம் மாநிலம், ராது லா மற்றும் ஷிகேட்ஸ் நகரம் வழியாக செல்லக் கூடியது. இந்த பாதையில் வாகனங்களில் செல்லும் அளவுக்கு சாலை வசதிகளும் உள்ளது. எனவே இந்த பாதையில் அச்சம் இன்றி, பாதுகாப்பாக பக்தர்கள் செல்ல முடியும் என்பதுடன், வயதான பக்தர்கள் எளிதாக வாகனத்திலும் சென்றுவர முடியும். மழைக்காலத்திலும் பக்தர்கள் சிரமம் இன்றி செல்ல முடியும். அதோடு பயண தூரமும், நேரமும் கணிசமாக குறையும்.இந்த புதிய பாதையை திறந்துவிட அனுமதி வழங்கியதற்காக சீன அதிபர் ஜின்பிங்குக்கு, பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:-கைலாய மலை, மானசரோவர் ஏரிக்கு நாது லா வழியாக புதிய பாதையை திறப்பதற்கு அனுமதித்த சீன அதிபர் ஜின்பிங்குக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போதுள்ள உத்தரகாண்ட் வழியாக செல்லும் பாதையுடன், இந்த புதிய பாதையும் கூடுதலாக பயன்படுத்தப்படும்.

இந்த புதிய பாதை மூலம் பக்தர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும். வாகனங்கள் மூலமே கைலாய மலைக்கும், மானசரோவருக்கும் சென்றுவர முடியும். இது குறிப்பாக வயதான பக்தர்களுக்கு மிகவும் பலன் அளிப்பதாக இருக்கும். மழைக்காலங்களில் இது பாதுகாப்பான மாற்றுப்பாதையாகவும் இருக்கும். பக்தர்களின் பயண தூரமும், நேரமும் கணிசமாக குறையும். இதன்மூலம் இனி அதிகமான பக்தர்கள் கைலாயம் மற்றும் மானசரோவர் சென்றுவருவார்கள்.இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி