செய்திகள்,திரையுலகம் பர்மா (2014) திரை விமர்சனம்…

பர்மா (2014) திரை விமர்சனம்…

பர்மா (2014) திரை விமர்சனம்… post thumbnail image
கடன் வாங்கி கார் வாங்கியவர்கள், வாங்கிய பணத்தை திரும்ப கட்டமுடியாமல் போகும் நிலையில், அவர்களுடைய காரை பறிமுதல் செய்து, கடன் கொடுத்தவரிடம் ஒப்படைக்கும் பணியை செய்து வருகிறார் கோத்ரா சேட்டு. இவரிடம் உதவியாளாக இருந்து வருகிறார் குணா. குணாவிடம் பர்மா மற்றும் பூமர் இருவரும் வேலை பார்க்கிறார்கள்.சேட்டு சொல்லும் வேலையை குணா, தனது உதவியாளர்களான பர்மா மற்றும் பூமரிடம் ஒப்படைக்கிறார். அவர்களும் குணா சொன்ன வேலையை செய்து முடிக்கிறார்கள். இதனால் குணாவுக்கு நிறைய பணம் கிடைக்கிறது. ஆனால், குணாவோ பர்மா மற்றும் பூமருக்கு குறைந்த ஊதியமே கொடுக்கிறார்.இதனால் கோபமடைந்த பர்மாவும், பூமரும் குணாவை பலிவாங்க அவனை போலீசில் மாட்டிவிடுகின்றனர். போலீசும் குணாவை கைது செய்து சிறையில் அடைக்கிறது.

இதற்கிடையில், பர்மாவும் கல்பனாவும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இவர்களுடைய காதல் கல்பனாவின் பெற்றோருக்கு தெரிய வரவே அவளை கண்டிக்கின்றனர். ஆனால், பர்மாவைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று சொல்லி, வீட்டை விட்டு வெளியேறி பர்மாவுடனேயே தங்குகிறாள் கல்பனா.குணா ஜெயிலுக்கு சென்றுவிட்ட நிலையில், சேட்டுவிடம் நேரிடையாக பணியை வாங்கி செய்து வருகின்றனர் பர்மாவும், பூமரும். ஒருநாள் இவர்களுக்கு 28 காரை பறிமுதல் செய்யவேண்டும் என்ற பணி வருகிறது. இந்த பணியை பூமர், பர்மா, கல்பனா மூன்று பேரும் இணைந்து செய்கின்றனர்.
27 கார்களை பறிமுதல் செய்துவிட்ட நிலையில், 28-வது காரை பறிமுதல் செய்துவிட்டு திரும்பி வருகின்றனர். அப்போது, கொள்ளைக் கும்பல் ஒன்று வங்கியில் பணத்தை திருடிக்கொண்டு வந்து, இவர்கள் பறிமுதல் செய்த காரில் ஏறி தப்பிச் சென்றுவிடுகின்றனர்.சேட்டுவிடம் சென்று மூவரும் இதுபற்றி முறையிடுகிறார்கள். சேட்டுவோ, நாயகி கல்பனாவை பிடித்து வைத்துக் கொண்டு, காரை திரும்பக் கொண்டு வந்தால்தான் அவளை உயிரோடு விடுவேன் என்று இருவரையும் மிரட்டுகிறான். இதையடுத்து, பர்மாவும், பூமரும் காரைத் தேடி அலைகின்றனர்.

அப்போது, இவர்களுக்கு மாறன் என்பவரின் அறிமுகம் கிடைக்கிறது. அவர், தன்னை போலீஸ் என்று இவர்களிடம் அறிமுகம் செய்து கொள்கிறார். மேலும், அந்த கார் எங்கிருக்கிறது என்பது தனக்கு தெரியும் என்றும், அந்த காரை பறிமுதல் செய்தால், அந்த காரில் இருக்கும் பணத்தையெல்லாம் தன்னிடம் ஒப்படைத்துவிட்டு காரை அவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறான்.இதற்கிடையில், பர்மா-பூமரால் பழிவாங்கப்பட்ட குணா சிறையில் இருந்து வெளியே வந்து இவர்களை பழிதீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.இறுதியில் பர்மாவும் பூமரும் திருடுபோன காரை மீட்டு கல்பனாவை மீட்டார்களா? குணா, பர்மாவையும் பூமரையும் பழிவாங்கினாரா? என்பதே மீதிக்கதை.பர்மா கதாபாத்திரத்தில் மைக்கேல் தங்கதுரை அந்த கதாபாத்திரத்திற்கு சற்றும் பொருந்தவில்லை. தானும் மாஸ் ஹீரோவாக வேண்டும் என்று நினைத்து களமிறங்கியுள்ள இவருக்கு, அதற்கேற்ற நடிப்பும், பொருத்தமான முகமும் இல்லாதது வருத்தமே. காதல் காட்சிகளில் மட்டும் ஓரளவுக்கு நடித்திருக்கிறார்.

ரேஷ்மி மேனன் திரையில் அழகாக தெரிகிறார். இவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு குறைவுதான் என்றாலும், அவருடைய கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். மைக்கேல் நண்பராக வரும் கார்த்திக் சபேஸ் கதாநாயகனுக்கு இணையாக படம் முழுக்க வருகிறார். என்றாலும், ஒரு சில காட்சிகளில் மட்டுமே இவர் செய்யும் காமெடியை ரசிக்க முடிகிறது.குணாவாக வரும் சம்பத்தை இந்த படத்தில் வீணடித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். குறைவான காட்சிகளே வருகிறார். மிடுக்கான தோற்றம், கலர் கலராய் உடைகள் என அசத்துகிறார். படத்தில் வரும் ஒரு குத்து பாடலுக்கு நடனமாடும் இவருக்கு ஜோடி கொடுக்காதது அவருக்கு வருத்தமாக இருந்ததோ என்னவோ, நமக்கு வருத்தம்தான்.சேட்டுவாக வரும் அதுல் குல்கர்னி நடிப்பில் வில்லத்தனம் காட்டுகிறார். பார்வையாலேயே மிரட்டும் இவரது நடிப்பு அபாரம்.கேங்ஸ்டர் படமாக உருவாக்கியிருக்கும் இயக்குனர் தரணிதரன், கேங்ஸ்டர் படங்களுக்கே உண்டான விறுவிறுப்பை திரைக்கதையில் உருவாக்க தவறியிருக்கிறார். மேலும், படத்தின் எந்தவொரு கதாபாத்திரத்தையும் சுவாரஸ்யம் இல்லாமல் உருவாக்கியிருப்பது மேலும் பலவீனம். இவருடைய வசனங்கள் படத்தை கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறது.யுவனின் ஒளிப்பதிவு படத்திற்கு மெருகூட்டியிருக்கிறது. இடத்திற்கு தகுந்தாற்போல் லைட்டிங் அமைத்து படமாக்கியிருப்பது அருமை. சுதர்சன் எம்.குமாரின் பின்னணி இசையில் மட்டுமே வேகம் தெரிகிறது. பாடல்கள் மனதில் நிற்கவில்லை.

மொத்தத்தில் ‘பர்மா’ வேகம்……………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி