செய்திகள்,விளையாட்டு இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.சி!…

இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.சி!…

இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.சி!… post thumbnail image
துபாய்:-நாட்டிங்காம் டெஸ்டின் போது இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை திட்டி தீர்த்ததுடன் அவரை தள்ளிவிட்டு வம்பு செய்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் இன்றி தப்பினார். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் செய்த புகாரின் பேரில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷனர் கார்டன் லீவிஸ் 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரித்து இருவர் மீதும் தவறில்லை என்று தீர்ப்பு வழங்கினார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஐ.சி.சி.யின் செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என்பதால் அவருக்கு கடிதம் எழுதிய இந்திய கிரிக்கெட் வாரியம், தீர்ப்பை எதிர்த்து உடனடியாக அப்பீல் செய்யும்படி வலியுறுத்தியது.இந்நிலையில் இந்தியாவின் கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரித்து விட்டது. இது தொடர்பாக ஐ.சி.சி. நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கார்டன் லீவிசின் தீர்ப்பு எங்களுக்கு பரிபூரண திருப்தியை அளிக்கிறது. இந்த ஒழுங்கு நடவடிக்கை விசாரணை நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடந்தது. விசாரணையின் போது இரண்டு தரப்பினரும் கேள்விகள் கேட்கவும், தங்களிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் போதிய வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு தரப்பிலும் 13 பேர் சாட்சியம் அளித்தனர். அதன் பிறகு மிகவும் கவனமாக பரிசீலித்து இந்த முடிவுக்கு கார்டன் லீவிஸ் வந்திருக்கிறார்.

எனவே இதை எதிர்த்து அப்பீல் செய்வதற்கு எந்த தகுதியும் இல்லை. அது மட்டுமின்றி இது போன்ற நடவடிக்கையில் இறங்கினால், அது விளையாட்டின் நலனுக்கு உகந்ததாக இருக்காது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே தீர்ப்பை எதிர்த்து ஐ.சி.சி. அப்பீல் செய்யாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே இந்த சர்ச்சை குறித்து மீண்டும் பேசிய இந்திய கேப்டன் டோனி, இந்த விவகாரத்தில் முதலில் நான் என்ன சொன்னேனோ அந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. எனது அணி வீரர் தவறு ஏதும் செய்யாத நிலையில் அவருக்கு அபராதம் விதித்தால், அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கத்தான் செய்வேன். ஆனால் அதே வீரர் எல்லை தாண்டி நடந்து கொண்டால், அவரின் பின்னால் நான் நிற்க மாட்டேன். பிரச்சினையையும் தனியாகவே எதிர்கொள்ள விட்டிருப்பேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி