அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் தனது பராமரிப்பில் வளர்ந்த இளைஞரை நேபாள பெற்றோரிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி!…

தனது பராமரிப்பில் வளர்ந்த இளைஞரை நேபாள பெற்றோரிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி!…

தனது பராமரிப்பில் வளர்ந்த இளைஞரை நேபாள பெற்றோரிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி!… post thumbnail image
காத்மாண்டு:-நேபாளத்தில் இருந்து பிழைப்பு தேடி தனது சகோதரனுடன் இந்தியாவுக்கு வந்த ஒரு சிறுவன் ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை செய்து வந்தான்.அவனது சகோதரன் அந்த வேலை பிடிக்காததால் நேபாளத்துக்கே சென்றுவிட முடிவு செய்து, உத்தரப்பிரதேச எல்லை வழியாக சொந்த நாட்டுக்கு செல்லும் ஆர்வத்தில் கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறுவதற்கு பதிலாக குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்துக்கு செல்லும் ரெயிலில் தவறுதலாக ஏறி விட்டான்.

அகமதாபாத்தில் மொழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த ஜீத் பகதூர் என்ற அந்த சிறுவனை கண்ட ஒரு பெண் அப்போது குஜராத்தின் முதல் மந்திரி பதவியை கூட ஏற்காமல் வெறும் பா.ஜ.க. பொறுப்பாளராக மட்டும் இருந்த நரேந்திர மோடியிடம் அழைத்து சென்றார்.அன்று முதல் மோடியின் வீட்டில், அவரது கண்காணிப்பில் வளர்ந்த அவனுக்கு கல்வி மற்றும் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டு இரண்டிலும் சிறந்து விளங்கினான். குஜராத்தி மொழியையும் கற்றுக்கொண்டான். மோடி குஜராத்தின் முதல் மந்திரியான பிறகும் அவர் வீட்டிலேயே வளர்ந்து வந்த ஜீத் பகதூர், அவர் பிரதமர் பதவியை ஏற்று டெல்லிக்கு சென்று விட்டதையடுத்து, அகமதாபாத்தில் தான் ‘பி.பி.ஏ.’ கற்கும் கல்லூரியின் விடுதியில் தங்கியபடி படித்து வந்தான்.

இதற்கிடையே, நேபாளத்தில் உள்ள அவனது குடும்பத்தினரைப் பற்றி விசாரித்து தெரிந்துக் கொள்ளும்படி அரசு அதிகாரிகளுக்கு மோடி உத்தரவிட்டிருந்தார்.நீண்ட நாள் தேடுதலுக்கு பின் அவனது காலில் இருந்த ஆறு விரல்களை கொண்டு அவனது பெற்றோர் யார்? என்பதை கண்டுபிடித்த அதிகாரிகள், இது பற்றிய விபரத்தை மோடியிடம் தெரிவித்தனர்.தற்போது இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் அரசு முறை பயணமாக இன்று நேபாள தலைநகர் காத்மாண்டு சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, நீண்ட காலமாக குடும்பத்தை விட்டு பிரிந்து, தற்போது 26 வயது இளைஞராக வளர்ந்துள்ள ஜீத் பகதூரையும் தன்னுடன் அழைத்துச் சென்று அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

ஆனந்த கண்ணீருடன் மகனை ஆரத்தழுவி வரவேற்ற ஜீத் பகதூரின் குடும்பத்தினர், ஜீத் பகதூரை இவ்வளவு காலமாக சொந்த மகன் போல வளர்த்து வந்ததுடன் 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய சந்திப்புக்கு உதவிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
ஜீத் பகதூரின் பெற்றோர் தற்போது நேபாளத்தின் நாவல்பராஸ் மாவட்டத்தில் உள்ள குடிசைப் பகுதியில் வசித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் வீட்டில் வளர்ந்த அனுபவம் பற்றி கருத்து கூறிய ஜீத் பகதூர், ‘அவர் (மோடி) என்னை உடன் பிறந்த தம்பியாக கவனித்துக்கொண்டார். எனது தாயார் கூட எனக்காக இவ்வளவு செய்திருக்கமாட்டார்.ஒரு வி.ஐ.பி.யுடன் வாழ்ந்தது எனக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம். ஆனால், ஒரு வி.ஐ.பி.யுடன் வாழ்கிறோம் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை’ என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
தற்போது இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ. படிக்கும் இவர் மீண்டும் இந்தியாவுக்கு வந்து கல்வியை தொடர விரும்புவதாக தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி