பூம்புகார் புத்தகங்கள் நேர் நேர் தேமா – புத்தகம் ஒரு பார்வை…

நேர் நேர் தேமா – புத்தகம் ஒரு பார்வை…

நேர் நேர் தேமா – புத்தகம் ஒரு பார்வை… post thumbnail image
நேர் நேர் தேமா என்ற புத்தகம் கோபிநாத் சந்தித்த பிரபலங்கள் அளித்த பேட்டியின் தொகுப்பு ஆகும். பல்வேறு துறை சார்ந்த மனிதர்களின் பேட்டிகளை தொகுத்திருக்கின்றார். அவர்களின் வாழ்க்கை, தங்கள் துறையில் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள், அவர்கள் இன்றுவரை தாரக மந்திரமாய் ஏற்றுக் கொண்டிருக்கும் பல சித்தாந்தங்கள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன. நேர் நேர் தேமா புத்தகத்தை படிப்பதன் மூலமாக உங்கள் தன்னம்பிக்கை உயரும் என்றெல்லாம் உறுதி தருவதற்கில்லை. தங்களை எப்படி வடிவமைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறவர்களுக்கு இந்தப் புத்தகம் சில முன்னுதாரணங்களை சொல்லக் கூடும் என்கிறார் முன்னுரையில் கோபிநாத். நேர் நேர் தேமா புத்தகத்தில் இருந்து சிலரின் பேட்டியின் தொகுப்புகள்.

வைரமுத்து :

வைரமுத்துவிடம் தான் அவரின் ரசிகன், அவரது படைப்புகளை நிறைய வாசித்துள்ளேன் என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்று கோபிநாத் விரும்பினாலும், அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று தயக்கம் இருந்ததாம். அதனால் எதுவும் சொல்லாமல், பேட்டி மட்டும் எடுத்துவிடலாம் என்று எண்ணியபோது, வைரமுத்துவே முன்வந்து தான் கோபிநாத்தின் ரசிகர், இவர் செய்தியாளராக இருந்ததிலிருந்து பார்த்து, அவரது தமிழை ரசித்து வருவதாகவும் சொல்லியது மிகவும் ஆனந்த அதிர்ச்சியளிப்பதாக இருந்தது என்று கோபிநாத் தனது நேர் நேர் தேமா புத்தகத்தில் கூறியுள்ளார். ஒரு பிரபலம் நம்மை அடையாளம் கண்டு வாழ்த்தினால் அதைவிட மிகப் பெரிய சந்தோஷம் என்ன இருக்கமுடியும்? ”என் சக்தி இவ்வளவுதான் என்று ஏன் திட்டமிட வேண்டும்? ஏன் நம்மை நாமே குறுக்கிக் கொள்ள வேண்டும்? என் சக்தியின் அளவு இவ்வளவுதான் என்று முடிவு செய்ய நாம் யார்?” – வைரமுத்துவின் இந்த வார்த்தைகள் தன்னம்பிக்கையற்று இருக்கும் மனிதர்களுக்கு ஒரு உற்சாக டானிக்.

நல்லி குப்புசாமி செட்டியார் :

Service Management என்று இப்போது ஒரு பாடத்தையே வைத்து, அதில் சான்றளிப்பெல்லாம் கொடுக்கிறார்கள். ஆனால், இவர்கள் அதையெல்லாம் படிக்காமலேயே, ‘வாடிக்கையாளர்தான் தெய்வம்’ என்று சொல்லி, அதை பின்பற்றி வந்து, தம் தொழிலில் வென்றுள்ளனர். மிதிவண்டியில் சென்று புடவைகைளை விற்று, இன்று ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே நிறுவினாலும், இன்னும் வாடிக்கையாளரை மதிக்கும் பண்பை ஒரு உதாரணத்தின் மூலமாக நேர் நேர் தேமா சொல்கிறார். கடைக்கு வந்த ஒரு வாடிக்கையாளர், தன்னை அங்கிருக்கும் விற்பனையாளர் சரியாக கவனிக்கவில்லையென்று திரும்பிப் போக, நல்லி அவர்கள், அவர் வீட்டிற்கே சென்று இனிமேல் அப்படி நடக்காது என்று மன்னிப்பு கேட்டு, அவரை மறுபடி கடைக்குக் கூட்டி வந்தாராம். நிலையான வாடிக்கையாளர்கள் கிடைக்கும் ரகசியம் இதுதானே?

பி.டி.உஷா :

எந்தவொரு வசதி வாய்ப்பும் இல்லாமல், கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் ஒலிம்பிக்ஸ்வரை சென்று வந்த பி.டி.உஷாவின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு தன்னம்பிக்கை பாடம். ’ஒரு விளையாட்டு வீரருக்குத் தேவைப்படுகிற வசதிகள் அவசியம் வேண்டும். அது இருந்தா மட்டும் போதாது. ஜெயிச்சே ஆகணுங்கற உறுதி மனசுக்குள்ளே இருந்துக்கிட்டே இருக்கணும்’ என்று நேர் நேர் தேமா புத்தகத்தில் பி.டி.உஷா கூறியுள்ளார்.

பத்மா சுப்ரமணியம் :

டென்னிஸ் விளையாட ஆசை. ஆனால் விளையாடினால் பரதத்தின் லாவகம் வராது. ஆகவே டென்னிஸை துறந்தேன். பழைய சாதம் சாப்பிட ஆசை ஆனால் சாப்பிட்டால் நாட்டியம் ஆட முடியாது என்றார்கள். ஆகவே அதையும் துறந்தேன். இப்படி சிற்சில விஷயங்கள் பலவற்றை துறந்தே என் பெரிய ஆசையான பரதத்தை பயின்றேன் – என்கிறார் பத்மா சுப்ரமணியம். 1956ல் அரங்கேற்றம் நடத்தியதிலிருந்து திருமணம்கூட செய்துகொள்ளாமல் இன்றுவரை பரதத்திற்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்ட பத்மா, வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு நேர் நேர் தேமா புத்தகத்தில் சொல்லும் அறிவுரை மிகவும் அருமை. ‘தடுமாற்றம் இல்லாத குறிக்கோள் இருக்க வேண்டும். அதைவிட முக்கியம், நம் கலாச்சாரத்திற்கு ஒரு விலாசம் இருக்கிறது. அது நம் அடையாளம். அது குறித்து நமது வளரும் கலைஞர்கள் பெருமை கொள்ள வேண்டும்’.

கலைஞர் கருணாநிதி :

புத்தகத்தின் ஹைலைட்டாக இவரது பேட்டியை சொல்லலாம். அவரது அரசியல் மேல் எந்தவிதமான விமர்சனமாக இருந்தாலும், அவரது உழைப்பு பற்றி யாருமே வியக்காமல் இருக்கமுடியாது. அதையே கோபிநாத்தும் கலைஞரிடம் கேட்கிறார். அதற்கு கலைஞரின் பதில், அனைவரும் குறித்துவைத்து தினந்தோறும் பார்த்து வரவேண்டியதாகும். ‘இருக்கிற நேரத்தைத்தான் பயன்படுத்திக் கொள்கிறேன். அந்த நேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறேன். ஓய்வு என்பதை நான் எப்போதும் விரும்புவதில்லை. ஓய்வு நேரத்திலும் உழைக்க வேண்டும் என்று கருதுகிறேன். உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு அதுவே என் முன்னேற்றத்திற்குக் காரணம்’. இது அறிஞர் அண்ணா கலைஞரை பற்றி சொன்னதாக நேர் நேர் தேமா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.வாழ்க்கை வாழ்வதற்கே என்றாலும்கூட வாழ்வதற்காகவே வாழ்க்கை என்று இருந்துவிடக் கூடாது. வாழு, வாழவிடு என்ற நிலையில் அது அமைய வேண்டும் என்ற தத்துவத்தை சொல்வதோடு, தமிழர்களுக்கு முதலில் ஒற்றுமை வேண்டும், அத்துடன் இனஉணர்வு, மொழிப்பற்று ஆகியவையும் சேர்ந்தால் நிச்சயமாக தமிழ்ச்சமுதாயம் சிகரத்தைத் தொடும் – என்று முடிக்கிறார் கலைஞர்.

அனைத்து வகை தமிழ் புத்தகங்களையும் வாங்க… அணுகுங்கள் பூம்புகார்.காம்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி