செய்திகள்,விளையாட்டு இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது!…

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது!…

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது!… post thumbnail image
நாட்டிங்காம்:-இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 457 ரன்களும், இங்கிலாந்து 496 ரன்களும் எடுத்தன. இரண்டு அணியிலும் கடைசி விக்கெட் ஜோடி 100 ரன்களுக்கு மேல் எடுத்து வியக்க வைத்தது.39 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 8 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து பேட் செய்த இந்திய அணியில் விராட் கோலியும் (8 ரன்), ரஹானேவும் (24 ரன்) ஸ்டூவர்ட் பிராட்டின் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணிக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டது. அடுத்து ரவீந்திர ஜடேஜாவும், கேப்டன் டோனியும் இணைந்தனர். ஜடேஜா தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார். சிறிது நேரத்தில் டோனியும் (11 ரன்) நடையை கட்டினார்.இதைத் தொடர்ந்து ஜடேஜாவும், அறிமுக வீரர் ஸ்டூவர்ட் பின்னியும் ஜோடி சேர்ந்து அணியின் சரிவை தடுத்து ஆபத்தில் இருந்து காப்பாற்றினர். தனது 38-வது பந்தில் முதல் ரன்னை எடுத்த ஜடேஜா தனது பங்குக்கு 31 ரன்கள் (98 பந்து, 5 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினார்.இதன் பின்னர் ஸ்டூவர்ட் பின்னியும், புவனேஷ்வர்குமாரும் கைகோர்த்து அணியை 300 ரன்களை கடக்க வைத்தனர். ஆடுகளத்தில் பந்து வீச்சு துளியும் எடுபடவில்லை. வழக்கமாக இங்கிலாந்து ஆடுகளங்களில் பந்து தாறுமாறாக எகிறும். ஆனால் இந்த ஆடுகளம் சலனின்றி காணப்பட்டதால், பந்து வீச்சாளர்களால் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த இயலவில்லை. அபாரமாக ஆடிய ஸ்டூவர்ட் பின்னி 78 ரன்களில் (114 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார்.

ஆட்டம் டிராவில் முடிவது உறுதியானதால் இங்கிலாந்து தரப்பில் கேப்டன் அலஸ்டயர் குக் கூட பவுலிங் செய்தார். அவரது அதிர்ஷ்டம் இஷாந்த் ஷர்மாவை (13 ரன்) வீழ்த்தி தனது முதல் சர்வதேச விக்கெட்டை கைப்பற்றினார்.இந்திய அணி 123 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 391 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்த போது, போட்டி டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. புவனேஷ்வர்குமார் 63 ரன்களுடன் (138 பந்து, 10 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் வருகிற 17ம் தேதி தொடங்குகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி