செய்திகள்,திரையுலகம் மீண்டும் அம்மன் (2014) திரை விமர்சனம்…

மீண்டும் அம்மன் (2014) திரை விமர்சனம்…

மீண்டும் அம்மன் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
முன்னொரு காலத்தில் தீய சக்திகள் வலுப்பெற்று இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களையும் அழித்துக்கொண்டிருந்தன. அந்த தீய சக்திகள் பூமியை அழிக்க வரும்போது அம்மன், அந்த தீயசக்திகளிடம் உங்களுக்கு நான் கட்டுப்படுகிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்தபடியால், பூமியை அழிக்காமல் அம்மனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறது.

இதனால், அம்மன் சக்தியெல்லாம் இழந்து வெறும் சிலையாகவே உள்ளது. இந்த அம்மனை குலதெய்வமாக வழிபட்டு வரும் மலை சாதியினரை விரட்டியடித்து விட்டு, அந்த இடத்தில் கஞ்சா செடியை வளர்த்தால் நல்ல லாபம் பெறலாம் என நினைக்கும் செல்வந்தர் ஒருவர், அந்த கோவில் பூசாரியை கைக்குள் போட்டுக் கொண்டு இதற்காக திட்டம் தீட்டுகிறார்.அதன்படி பூசாரி, அம்மன் கோபமடைந்துவிட்டதாக கூறி நாடகம் ஆடி, அந்த மலை சாதியினரை அங்கிருந்து விரட்டியடிக்கின்றார். அம்மன் தீயசக்திகளின் பிடியில் இருப்பதால் அவளால் ஒன்றும் செய்ய முடியாமல் போகிறது. அம்மனை தீய சக்திகளின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டுமானால் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் அம்மனுக்கு தங்களை காணிக்கையாக்கிக் கொண்டால், தீய சக்திகளின் பிடியிலிருந்து அம்மன் விடுபடுவாள் என்ற ரகசியத்தையும் கூறுகிறான் பூசாரி.

இதை, அந்த கோயிலில் ஒரே பிரசவத்தில் பிறந்து, வளர்ந்து அனாதைகளான 4 பெண்களும் கேட்கின்றனர். தாங்கள் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் என்பதால் தங்களை அம்மனுக்கு காணிக்கையாக கொடுத்து, தீய சக்திகளிடமிருந்து அவளை விடுவிக்க அக்னிக்குள் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். அம்மனும் தீய சக்தியிலிருந்து விடுபட்டு, தன் பக்தர்களை கொடுமைப்படுத்திய பூசாரி மற்றும் செல்வந்தர் மற்றும் அவரது அடியாட்களை அழித்துவிடுகிறாள்.தன்னை விடுவிப்பதற்காக தங்களையே தீக்கிரையாக்கிக் கொண்ட அந்த 4 பெண்களையும் தனது சக்தியால் உயிர்பெறச் செய்து, தன்னுடைய தங்கைகளாக அவர்களை ஏற்று, அங்கம்மா, செல்லியம்மாக்களாக அங்கேயே தெய்வமாக அமர்த்துகிறாள். இவர்களை வழிபடும் பக்தையாக குட்டி ராதிகா. அனாதையான இவள், ஊருக்கெல்லாம் பால்காரியாக இருப்பதுடன், அம்மன் கோவிலில் பணிவிடைகள் செய்தும், ஊரில் நோய், நொடியில் இருப்பவர்களுக்கு நோய்களை தீர்ப்பவளாகவும் இருந்து வருகிறாள்.

இதே ஊரில் வசிக்கும் பெரிய செல்வந்தரான ரிச்சர்ட்டை அவரது சொந்த, பந்தங்கள் பைத்தியமாக்கி அவரிடமிருந்து சொத்துக்களை அபகரிக்க நினைக்கின்றனர். அதன்படி, ரிச்சர்டுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு பண்டங்களில் பைத்தியமாக்குவதற்கான மாத்திரைகளை கலந்து கொடுத்து அவனை பைத்தியமாக ஆக்குகின்றனர். இதையெல்லாம், அறியும் குட்டி ராதிகா அவனை எப்படியாவது இவர்களது பிடியில் இருந்து காப்பாற்ற நினைக்கிறாள்.இந்நிலையில், உலகத்தை தனது பிடியில் கொண்டுவர வேண்டும் என நினைக்கும் தீய சக்தி, மனித உருவில் பூமியில் பிறக்கிறது. உலகத்தை தன் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் எடுக்கும் அந்த தீய சக்திக்கு குட்டி ராதிகா தடையாக இருப்பதால், அவளை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறது. மூன்று கிரகணங்களுக்குள் அவளை கொன்றால் தான், தன்னுடைய பலம் அதிகரிக்கும். அப்படியில்லையென்றால், அம்மன் வலுப்பெற்று தன்னை அழித்துவிடுவாள் என்பதால், மூன்று கிரகணங்களுக்குள் அவளை அழிக்கவேண்டும் என்று முடிவெடுக்கிறது தீய சக்தி. இறுதியில் தீய சக்தியின் ஆக்ரோஷத்துக்கு குட்டி ராதிகா பலியானாளா? அல்லது அம்மனின் துணையோடு அந்த தீயசக்தியை அழித்தாளா? ரிச்சர்டை அவரது குடும்பத்தினரிடமிருந்து காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

தெலுங்கில் வெளியாகி ஹிட்டான ‘அவதாரம்’ படமே தமிழில் ‘மீண்டும் அம்மன்’ ஆக டப் செய்து வெளியிட்டுள்ளனர். சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் வரும் பானுப்ரியா, அம்மனாக பளிச்சிடுகிறார். அந்த வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சாந்தம், உக்கிரம், கோபம், சிரிப்பு என அனைத்து பாவனைகளையும் அழகாக செய்திருக்கிறார்.இவருடைய தங்கைகளாக வரும் நால்வரும் சிறிது நேரமே வந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குட்டி ராதிகா, அழகான குடும்ப பெண்ணாக காட்சியளிக்கிறார். அம்மனின் பக்தையாக இவர் வரும் காட்சியெல்லாம் பக்தி மழை பொழிகிறது. மனநிலை பாதிக்கப்பட்டவராக வரும் ரிச்சர்ட் அழகான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். அவருடைய குடும்ப உறுப்பினர்களாக வருபவர்களும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.தீயசக்தியின் உருவமாக வரும் சத்ய பிரகாஷ், பேச்சிலேயே மிரட்டுகிறார். கண்களால் பயமுறுத்தவும் செய்திருக்கிறார். பல பக்தி படங்களை எடுத்து வெற்றி பெற்ற இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா, இப்படம் மூலம் திறமையான இயக்குனர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

கிராபிக்ஸ் காட்சிகளை பிரம்மாண்ட காட்டி ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, பாம்பு நடனமாடுவது, டிராகனுடன் பசு மாடு சண்டை போடுவது, கிணற்றில் இருந்து வரும் பிரம்மாண்ட ஆக்டோபஸ், வீடு முழுவதும் கண்கள் என அனைத்தும் பிரம்மாண்டமாகவும், ஆச்சர்யத்தையும் கொடுத்திருக்கிறது.ஸ்ரீ வெங்கட்டின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் வலுக்கூட்டியிருக்கிறது. ஜின்னாவின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. கிருஷ்ணாவின் இசையில் பாடல்கள் பக்தியை அதிகமாக்குகிறது.

மொத்தத்தில் ‘மீண்டும் அம்மன்’ பக்தி……..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி