செய்திகள் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்தியர்!…

ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்தியர்!…

ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்தியர்!… post thumbnail image
லண்டன்:-இங்கிலாந்தில் தொழில் செய்து குடும்பத்துடன் இங்கு வசித்து வந்த இந்தியரான சஞ்சய் குமார்(45) கடந்த 2011ம் ஆண்டு வேலை நிமித்தமாக இந்தியாவுக்கு சென்றார்.அவ்வேளையில், உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிக்கிச்சை பெறுவதாக லண்டனில் உள்ள தனது மனைவிக்கு அவர் ‘இமெயில்’ மூலம் தகவல் அளித்தார்.

பின்னர், மூளைக் காய்ச்சலால் அவர் இறந்து விட்டதாக சஞ்சய் குமாரின் இறப்புச் சான்றிதழ், இடுகாட்டு ரசீது ஆகியவற்றுடன் இங்கிலாந்தில் உள்ள பிரபல இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அவரது மனைவி முறையீடு செய்தார்.அந்த நிறுவனத்தில் தனது கணவர் கட்டி வந்த பிரீமியத்துக்கான இழப்பீட்டு தொகையான 1 கோடியே 15 லட்சம் பவுண்டுகளை (இந்திய மதிப்புக்கு சுமார் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகம்) வாரிசுதாரர் என்ற முறையில் தனக்கு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புலனாய்வு பிரிவினர், சஞ்சய் குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுவதும், இறந்ததாக குறிப்பிடப்பட்டதும் நாடகம் என்பதை கண்டுபிடித்தனர்.இதற்கிடையில், வேறொரு பெயரில் போலி பாஸ்போர்ட் மூலம் கடந்த 2012ம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்துக்கு வந்த சஞ்சய் குமாரை கைது செய்த லண்டன் போலீசார், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி அஞ்சுவையும் கைது செய்து இருவர் மீதும் சவுத்வார்க் கிரவுன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

தனது கணவரின் தொழில் கூட்டாளிகள், ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை ஏவி, அவரை பணயக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு, தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு இழப்பீடு தரும்படி துப்பாக்கி முனையில் மிரட்டினர். அவரது உயிரை காப்பாற்றவே இந்த நாடகத்துக்கு துணை போக வேண்டியதாகி விட்டது என்று தெரிவித்த அஞ்சுவின் வாதத்தை ஏற்றுக்கொள்ள கோர்ட் மறுத்து விட்டது.இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காக இறந்ததாக நாடகமாடி மோசடி செய்த குற்றவாளி சஞ்சய் குமாருக்கு இரண்டரை ஆண்டுகளும், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவிக்கு 5 மாதங்களும் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி