அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல்!…

தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல்!…

தமிழக மீனவர்கள் மீது மீண்டும்  இலங்கை கடற்படை தாக்குதல்!… post thumbnail image
ராமேசுவரம்:-மீன்பிடி தடை காலம் முடிந்து 45 நாட்களுக்கு பிறகு கடந்த 31ம் தேதி முதல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.முதல்நாளே இலங்கை கடற்படை தங்களது சுயரூபத்தை காட்டிவிட்டது. 33 மீனவர்களையும், 5 படகுகளையும் சிறைபிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றது. பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அதனை தொடர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்சே 33 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். அவர்கள் இன்று ராமேசுவரம் வருகிறார்கள்.இந்நிலையில் நேற்று முன்தினமும் ராமேசுவரம் மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர். இதற்கிடையே பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 100க்கும் மேற்பட்ட படகுகளில் நேற்று மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து பாம்பன் மீனவர்களை தாக்க தொடங்கினர். படகுகளில் இருந்த வலைகளை அறுத்து எரிந்து சேதப்படுத்தினர். 30 மீன்பிடி படகுகளின் சாதனங்களையும் உடைத்து நொறுக்கினர்.

இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமான தாக்குதலில் இனியன் என்பவருக்கு சொந்தமான படகு ஓட்டை விழுந்து கடலில் மூழ்கியது. அந்த படகில் இருந்த முருகன், ஜெகன், ராஜூ, முகிலன், கருப்பையா, கருப்புச்சாமி, இன்னாசி, வெனிங்டன் ஆகியோர் கடலில் குதித்து நீந்த தொடங்கினர்.அவர்களை மற்ற படகுகளில் இருந்த மீனவர்கள் காப்பாற்றி தங்கள் படகுகளில் ஏற்றி கொண்டு கரைக்கு திரும்பினர்.இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதோடு மட்டுல்லாமல்லால் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் மீன்களையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.தடை காலம் முடிந்து கடலுக்கு சென்ற முதல்நாள் முதல் இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்கி வருவது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று மீனவர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி