செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் கிடைக்கவில்லை என அறிவிப்பு!…

மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் கிடைக்கவில்லை என அறிவிப்பு!…

மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் கிடைக்கவில்லை என அறிவிப்பு!… post thumbnail image
சிட்னி:-கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கி 227 பயணிகள், 12 சிப்பந்திகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370, கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி நள்ளிரவு 12.41 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானம் மார்ச் 8ம் தேதி காலை 6.30 மணிக்கு பீஜிங் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் தெற்கு சீனக் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது 8ம் தேதி அதிகாலை 2.40 மணிக்கு ரேடார் தொடர்பை இழந்து மாயமானது.

இந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரின் கதி என்ன என்பது இன்று வரை தெரியவில்லை. எத்தனையோ விமானங்கள், கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், அந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
கடைசியில், மாயமான விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற ரேடார் தகவலின் பேரில், விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வருகிற ‘பிங்’ சமிக்ஞையை கேட்டு, அது இருக்கிற இடத்தை தேடிக்கண்டு பிடிக்கும் ‘டோவ்டு பிங்கர் லொக்கேட்டர்’ என்னும் கருவிகளை ஓஸன் ஷீல்டு என்னும் ஆஸ்திரேலிய போர்க்கப்பலும், ‘எச்.எம்.எஸ். எக்கோ’ என்னும் இங்கிலாந்தின் நீர்நிலைப்பரப்பு ஆய்வு கப்பலும் இழுத்துச்சென்று தேடின.இந்நிலையில் மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 5-ந் தேதியும், 8-ந்தேதியும் தலா 2 முறை என 4 முறை ‘பிங்’ சிக்னல்கள் வந்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து அந்த இடத்தைச் சுற்றிலும் விமானத்தின் சிதைவுகளை தேடும் வேட்டையில் அதிநவீன நீர்மூழ்கி ‘ரோபோ’ ‘புளுபின்-21’ களமிறக்கப்பட்டது.இது தனது தேடுதல் வேட்டையை நேற்று முன்தினம் முடித்தது. இந்த நீர்மூழ்கி ரோபோ 850 சதுர கி.மீ. பரப்பளவுக்கும் அதிகமான பகுதியில் தனது தேடுதல் வேட்டையை நடத்தியது. கடலின் அடிமட்டத்தை ஸ்கேன் செய்து பார்த்தது. ஆனால் மாயமான விமானத்தின் சிதைவுகள் எதுவும் காணப்படவில்லை. இதை ஆஸ்திரேலியாவில் உள்ள ஜே.ஏ.சி.சி. என்னும் ஒருங்கிணைப்பு மையத்தின் இணை முகமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதையடுத்து மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து வெளியானது என கருதப்படுகிற 4 ‘பிங்’ சமிக்ஞைகளும், அந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட கப்பல்கள் அல்லது பிங் லொகேட்டர் கருவியின் மின்னணு சாதனத்திலிருந்து வெளிப்பட்டதாக இருக்கலாம் என்று அமெரிக்க கடற்படையின் பெருங்கடல் பொறியியல் பிரிவின் துணை இயக்குனர் மைக்கேல் டீன் தெரிவித்தார்.

இருப்பினும் காணாமல் போன மலேசிய விமானம், இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் தான் எங்கேயோ விழுந்து இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் நம்புவதாக சிட்னியில் நேற்று ஆஸ்திரேலிய துணைப்பிரதமரும், போக்குவரத்துத்துறை மந்திரியுமான வாரன் டிரஸ் கூறினார்.இனி தேடுதல் வேட்டையின்போது பெறப்பட்ட தகவல்களை பரிசீலித்து, அதிநவீன சாதனங்களை தருவித்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்துவது குறித்து ஆராயப்படும் என சிட்னியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி