செய்திகள்,திரையுலகம் என்னமோ நடக்குது (2014) திரை விமர்சனம்…

என்னமோ நடக்குது (2014) திரை விமர்சனம்…

என்னமோ நடக்குது (2014) திரை விமர்சனம்… post thumbnail image
சினிமா போஸ்டர் ஒட்டி பிழைப்பை நடத்தி வருகிறார் நாயகன் விஜய் வசந்த். இவருடைய அம்மா சரண்யா பொன்வண்ணன். தாய் மீது பாசம் இருந்தாலும், இவரது குடிசைக்கு அருகில் வாழும் ஒரு விபசாரப் பெண்ணுக்கு தனது தாய் ஆதரவாக இருப்பதால் அவளை வெறுத்து ஒதுக்கிறார் விஜய் வசந்த்.

ஒருநாள் நாயகி மகிமாவை சந்திக்கும் விஜய் வசந்த், முதல் சந்திப்பிலேயே அவள்மீது காதல் வயப்பட்டு விடுகிறார். ஆனால், நாயகிக்கு இவர் மீது விருப்பமில்லை. ஒருநாள் மகிமாவின் அப்பா அழகம்பெருமாள் நடுரோட்டில் நெஞ்சுவலியால் துடித்துக் கொண்டிருக்கும்போதும் யாரென்று தெரியாமலேயே அவருக்கு உதவி செய்கிறார் விஜய் வசந்த். தனது அப்பாவை காப்பாற்றியது விஜய்தான் என்பதை அறியும் மகிமாவுக்கு அவர்மீது காதல் வருகிறது. இந்நிலையில், நாயகி வெளிநாட்டில் சென்று படிப்பதற்காக வட்டிக்கு 5 லட்சம் பணம் வாங்கி, அதை ஒரு டிராவல் ஏஜெண்டிடம் அழகம் பெருமாள் கொடுக்கிறார். அந்த டிராவல் ஏஜெண்ட் இவரை ஏமாற்றிவிட்டு பணத்தை எடுத்து சென்றுவிடுகிறார். இதனால் பணக்கஷ்டத்தில் தவிக்கும் மகிமாவின் குடும்பத்திற்கு விஜய் வசந்த் உதவி செய்ய வருகிறார். இன்னும் 4 நாட்களுக்குள் பணத்தை கொண்டு வருவதாக கூறிச் செல்கிறார்.

ஒயின்ஷாப்பில் வைத்து தனக்கு நன்கு பழக்கமான தம்பி ராமையாவை விஜய் சந்தித்து தனக்கு அவசரமாக பணம் வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு தம்பி ராமையா தான் சொன்ன வேலையை முடித்துக் கொடுத்தால் பணம் தருகிறேன் என்று சொல்கிறார். அரசியல்வாதியான ரகுமான், வங்கி அதிகாரியான சுகன்யாவுடன் கைகோர்த்து வங்கிக்கு வரும் பணத்தை வட்டிக்கு கொடுத்து பணம் சம்பாதித்து வருகிறார். அவரிடம் உதவியாளராக பணிபுரியும் தம்பி ராமையா, அந்த பணத்தை கடன் கேட்பவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் பணியில் விஜயை சேர்த்துவிடுகிறார். 4 நாட்களில் 3 நாட்கள் இவரது பணி நன்றாக போகிறது. கடைசி நாளில் பணத்தைக் கொண்டுபோகும் போது மர்ம நபர்கள் அந்த பணத்தை திருடிச் சென்றுவிடுகிறார்கள். அந்த திருட்டை செய்தது பிரபுவின் ஆட்கள்.

தன்னிடம் இருந்த பணம் திருடு போய்விட்டதாக கூறும் விஜய் வசந்த்தை ரகுமான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். விஜய்தான் திருடிவிட்டான் என்று கூறி அவரது காதலியான மகிமாவை கடத்திக் கொண்டுபோய் வைத்துக் கொள்கிறார். பணத்தைக் கொடுத்துவிட்டு காதலியை மீட்டுச் செல்லும்படி விஜய் வசந்த்தை மிரட்டுகிறார்.
இறுதியில் பணத்தை திருடிய கொள்ளைக் கும்பலை நாயகன் கண்டுபிடித்தாரா? பணத்தை அந்த கொள்ளைக் கும்பலிடம் இருந்து கைப்பற்றி தனது காதலியை மீட்டாரா? என்பதே மீதிக்கதை. தனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து அதை திறம்பட நடித்து வெற்றி பெற்றிருக்கிறார் விஜய் வசந்த். எந்தவித அலட்டலும் இல்லாமல் அழகாக நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார். நாயகி மகிமா ‘சாட்டை’ படத்தில் பார்த்த அதே மினுமினுப்புடன் அழகாக இருக்கிறார். பாடல் காட்சிகளில் அழகாக நடனமாடியுள்ளார்.
தனக்கு எந்தவித கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தும் சரண்யா பொன்வண்ணன், தான் திறமையான நடிகை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

குடிசை வீட்டில் அழுக்குத் துணியுடன் வரும் இவருடைய கதாபாத்திரம், அவரை ஒரு பிரபல நடிகை என்பதையை மறைத்திருக்கிறது. பிரபு, ரகுமான், தம்பி ராமையா உள்ளிட்டோரும் தங்களுடைய கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.இயக்குனர் ராஜபாண்டி ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் கதையை சுவாரஸ்யம் குறையாமல் படமாக்கியிருக்கிறார். ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படாத வண்ணம் திரைக்கதையை அமைத்து கைதட்டல் பெறுகிறார். ப்ரவீண், ஸ்ரீகாந்த் எடிட்டிங் பிசிறு தட்டாமல் காட்சிகளை கோர்வையாக வைத்திருக்கிறது. பிரேம்ஜி இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கும் ரகம். பின்னணி இசையிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளை படமாக்கிய விதம் அருமை. காட்சிகளிலும் இவரது கேமரா அழகாக பளிச்சிடுகிறது.

மொத்தத்தில் ‘என்னமோ நடக்குது’ சாகசம்….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி