செய்திகள்,திரையுலகம் ரியோ 2 (2014) திரை விமர்சனம்…

ரியோ 2 (2014) திரை விமர்சனம்…

ரியோ 2 (2014) திரை விமர்சனம்… post thumbnail image
காடுகளில் உள்ள பறவைகளை ஆராய்ச்சி செய்யும் ஒருவரின் வீட்டில் நீல வண்ணக்கிளிகளான புளூ, மனைவி ரியோ அவரது 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறது. மிகவும் அரிய இனமான இக்கிளிகள் மனிதனுடன் வாழ்ந்து வருவதால், மனிதன் உபயோகிக்கும் அனைத்து இயந்திரங்களையும் உபயோகிக்கும் திறன் கொண்டுள்ளது.
ஒருநாள் தொலைக்காட்சியில் நீல வண்ணக்கிளிகள் இன்னும் பிரேசில் காட்டில் வாழ்ந்து வருவதாக செய்திகள் வருகிறது. இதை அறிந்துக் கொண்ட நீல வண்ணக்கிளிகள், அங்கு இருக்கும் மற்ற பறவைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்புகிறார்கள்.

அமேசான் காட்டிற்குச் செல்லும் இப்பறவைகள் அங்கு ஏகப்பட்ட நீல வண்ணக்கிளிகளை சந்திக்கிறார்கள்.இதில் ரியோவின் அப்பா கிளியும் அங்கு வாழ்ந்து வருகிறது. காட்டில் வாழும் கிளிகள் மனிதர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்று கூறுகிறது. ஆனால் புளூவும் ரியோவும் மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று கூறுகிறார்கள்.
இதற்கிடையில் காட்டில் உள்ள மரங்களை வெட்டி விற்க ஒரு கும்பல் வருகிறது. அவர்கள் நீல வண்ணக்கிளிகள் வாழும் மரங்களை வெட்ட நினைக்கிறார்கள். இதை வெட்டக் கூடாது என்று பறவைகள் ஆராய்ச்சியாளரும், அவரது மனைவியும் போராடுகிறார்கள். ஆனால் அவர்களால் தடுக்க முடியவில்லை. இதனால் காட்டில் உள்ள அனைத்து பறவைகளும் ஒன்று கூடி புளூ தலைமையில் காட்டை அழிக்க வந்தவர்களை விரட்ட முயற்சி செய்கிறார்கள்.இறுதியில் காட்டை அழிக்க வந்தவர்களை நீல வண்ணக்கிளிகள் விரட்டியதா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

அதிநவீன தொழில் நுட்பத்துடன் எடுக்கப்பட்ட இப்படம், திரையில் பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கிறது. படத்தில் பறவைகள் நடனமாடுவது, பேசுவது என அவர்கள் செய்யும் சிறு செயல்கள் கூட ரசிக்கும் படியாக உள்ளது. அதை காட்சிப்படுத்திய விதமும் கண்களுக்கு குளிர்ச்சியளிக்கிறது.ஜான் பெவலின் இசை படத்திற்கு கூடுதல் பலம். இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. ரெனால்டோ பால்கோவின் ஒளிப்பதிவு கண்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. கலர்புல்லான காட்சிகளை அமைத்து படம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

மொத்தத்தில் ‘ரியோ 2’ அருமையான கார்ட்டூன் திரைப்படம்…..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி