செய்திகள்,திரையுலகம் வெங்கமாம்பா (2014) திரை விமர்சனம்…

வெங்கமாம்பா (2014) திரை விமர்சனம்…

வெங்கமாம்பா (2014) திரை விமர்சனம்… post thumbnail image
பூலோகத்தில் பக்தர்கள் எல்லாம் தங்கள் சுயநலத்துக்காக மட்டுமே பகவானை வழிபடுகின்றனர் என்று வேதனைப்படும் பகவான் உண்மையான பக்தியை நிலைநாட்ட பூலோகத்தில் அவதாரம் எடுக்க முடிவு செய்கிறார். பக்தியை நிலைநாட்டும் பொருட்டு தானே அந்த அவதாரத்தை மேற்கொள்வதாக பகவானிடம் அம்பிகையே கேட்டுக் கொள்கிறார்.

அதன்படி, ஆந்திராவில் தரிகோண்டா கிராமத்தில் வசிக்கும் ஆச்சாரமான குடும்பத்தில் அம்பிகை குழந்தையாக அவதரிக்கிறாள். அவள் தான் வெங்கமாம்பா. சிறுவயது முதலே திருப்பதி வெங்கடாஜலபதி மீது தீவிர பக்தி கொண்டவளாக வளரும் வெங்கமாம்பா, அவரையே தனது கணவராகவும் மனதிற்குள் நினைத்து வாழ்ந்து வருகிறாள். ஆனால், இவளது தந்தையான சரத்பாபு தனது தங்கை மகனான வேங்கடபதியை இவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கிறார். வெங்கடஜாலபதியை எந்நேரமும் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கும் வெங்கமாம்பாவிடம் வேங்கடபதியை வெங்கடாஜலபதி என்று சொல்லி அவனுக்கும், வெங்கமாம்பாவுக்கும் பால்ய விவாகம் செய்து வைக்கின்றனர். அவளும் வேங்கடபதியை வெங்கடாஜலபதி என மனதுக்குள் நினைத்து அவனை மணமுடிக்கிறாள்.

இருவரும் வளர்ந்து பெரியவர்களானதும் சம்பிரதாய முறைப்படி இருவருக்கும் சாந்தி முகூர்த்தம் நடத்த ஏற்பாடுகள் செய்கின்றனர். ஆனால் இல்லறத்தின் மீது நாட்டம் கொள்ளாத வெங்கமாம்பா, வேங்கடபதிக்கு அம்பிகையாக காட்சியளிக்கிறாள். அம்பிகையை தனது மனைவியாக ஏற்றுக்கொள்ளமுடியாது என மறுக்கும் வேங்கடபதி, வெங்கமாம்பா அவளது இஷ்டப்படி வாழட்டும் என கூறிவிட்டு சென்று விடுகிறான்.கணவன் இறந்துவிட்டால் மனைவி விதவைக் கோலம் பூண்டு கொள்ளவேண்டும் என்ற சம்பிரதாயம் ஓங்கி இருந்த அக்காலத்தில் இந்த சம்பிரதாயத்தை வெங்கமாம்பா அடியோடு வெறுக்கிறாள். தான் பகவான் வெங்கடாஜலபதியைத்தான் மனதார கணவனாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகையால் என்னுடைய கணவர் இறந்துவிட்டாலும் தான் விதவைக்கோலம் பூண்டு கொள்ளமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறாள்.

அவளது கணவர் அகால மரணம் எய்யும் வேளையில் வெங்கமாம்பாவை விதவைக்கோலமாக ஆக்கக்கூடாது என தந்தையிடம் கூறி இறக்கிறார். கணவர் இறந்ததும் அவளை விதவைக்கோலம் பூண்டு கொள்ளச்சொல்லி அந்த ஊரில் இருக்கும் சிலர் நிர்பந்திக்கின்றனர். ஆனால், வெங்கமாம்பாவோ விதவைக்கோலம் பூண்டு கொள்ளமுடியாது என்று பிடிவாதமாக இருக்கிறாள். இதற்கு அவளது பெற்றோர் மறறும் கணவரின் பெற்றோர் ஆகியோர் வெங்மாம்பாவுக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.வெங்கமாம்பா சிறுவயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றவள் என்பதால் அவள் மேலும் யோக சாஸ்திரங்களை கற்றுக்கொள்வதற்காக பாடசாலையில் சென்று கல்வி பயில்கிறாள். 6 மாத காலம் சாஸ்திரங்கள் பயின்ற அவள், லட்சுமி நரசிம்மரை பற்றி கீர்த்தனைகளையும் எழுதுகிறாள். அந்த கீர்த்தனைகளை லட்சுமி நரசிம்மர் முன்பும் சமர்பிக்கிறாள். முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்த ஒருவனுக்கு அடைக்கலம் கொடுத்ததால் பிரமாண சம்பிரதாயத்தை மீறிவிட்டதாக கூறி அந்த ஊரில் இருந்து வெங்கமாம்பாவை வெளியேற்ற நினைக்கின்றனர். ஆனால் வெங்கமாம்பா தானாகவே அந்த ஊரில் இருந்து வெளியேறுகிறாள்.வெளியேறிய வெங்கமாம்பா வனாந்திரத்தில் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும் வேளையில் அவளுக்கு வேண்டாத சிலர் அவளை சுற்றி தீமூட்டி விட்டு சென்றுவிடுகின்றனர். உயிருடன் எரிக்கப்பட்ட வெங்கமாம்பா என்ன ஆனார்? இறைவனின் கட்டளையை எப்படி காப்பாற்றினார்? என்பதே மீதிக்கதை.

வெங்கமாம்பாவாக நடித்திருக்கும் மீனா, ஸ்ரீதேவியாகவும், வெங்கமாம்பாவாகவும் இருவேறு தோற்றத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வெங்கமாம்பாவாக பகவானை துதித்து உருகுவதில் மெய்சிலிர்க்க வைப்பதுடன் இளமை தோற்றத்திலும், முதுமை தோற்றத்திலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார். இவருடைய நடிப்புதான் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. எந்த இடத்திலும் நடிப்பை விட்டுக்கொடுக்காமல் அசாத்தியமாக நடித்து வெங்கமாம்பாவின் புகழை தூக்கி நிறுத்துகிறார்.
மேலும், இப்படத்தில் நடித்திருக்கும் சரத்பாபு, சுதா, ரங்கநாத், சனா, கௌசிக் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை திறமையாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

திருப்பதி அருகிலுள்ள தரிகோண்டா என்ற ஊரில் ஆச்சாரமான குலத்தில் பிறந்து வெங்கமாம்பா என்ற பெயரில் வளர்ந்து இறுதியில் ஸ்ரீதேவியாக பெருமாளுடன் இணைந்த ஒரு தெய்வீக பெண்ணின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்‌தை எடுத்திருக்கிறார் இயக்குனர் உதயபாஸ்கர். முதலில், இந்த தெய்வீக பெண்ணின் பெருமைகளை உலகறியச் செய்ய படமாக கொடுத்த இவருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். கதையில் எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாமல் அழகாக செய்திருக்கிறார். கதைக்களங்களை தேர்வு செய்வதில் ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.மரகத மணியின் இசையில் ஒரு சில பாடல்கள் கேட்கமுடிகிறது. சில பாடல்களில் வரிகளை இவரது இசை மறைத்துவிடுகிறது. கிருஷ்ணமூர்த்தியின் வசனம் இந்த படத்திற்கு மேலும் ஒரு பலம். இதுபோன்ற சரித்திர படங்களில் வசனங்கள்தான் பெரியளவில் பேசப்படும். இந்த படத்திலும் அது நன்றாகவே வந்திருக்கிறது. ராஜுவின் ஒளிப்பதிவு கண்களுக்கு இதமாக இருக்கிறது. ஒரு ஆன்மீக சரித்திர படத்தை பார்த்த திருப்தியை இவரது கேமரா நமக்கு கொடுக்கிறது.
மொத்தத்தில் ‘வெங்கமாம்பா’ ஒரு வரலாற்று சரித்திரம்…..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி