அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் வைகோவை ஆதரித்து அழகிரி பிரசாரம் செய்வாரா?…

வைகோவை ஆதரித்து அழகிரி பிரசாரம் செய்வாரா?…

வைகோவை ஆதரித்து அழகிரி பிரசாரம் செய்வாரா?… post thumbnail image
சென்னை:-தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி தீவிர சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை திரட்டி வருகிறார். தென்மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வரும் அழகிரி தி.மு.க. பிரமுகர்களையும் சந்தித்து பேசினார். சமீபத்தில் சென்னையை அடுத்துள்ள பம்மலில் உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வரும் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பியையும் சந்தித்து அழகிரி உடல்நலம் விசாரித்தார்.

அதே நேரத்தில் தி.மு.க. தலைமைக்கு எதிரான கருத்துக்களையும் அவர் தொடர்ந்து கூறி வருகிறார். இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் அழகிரியுடன் தி.மு.க.வினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும், இதனை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், அழகிரியும் சந்தித்து பேசினார்கள். இது தற்செயலாக நடந்த சந்திப்பு போலவே தெரிந்தது.இந்நிலையில் நேற்று மதுரையில் அழகிரியின் வீட்டுக்கு சென்ற வைகோ அவரை சந்தித்து பேசினார். இதுபற்றி பின்னர் பேட்டி அளித்த வைகோ, பாராளுமன்ற தேர்தலில் தங்களுக்கு (ம.தி. மு.க.வுக்கு) ஆதரவு அளிக்கு மாறு அழகிரியிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பா.ஜ.க. அணியில் 7 தொகுதிகளில் போட்டியிடும் ம.தி.மு.க. தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் களம் இறங்கியுள்ளது. விருதுநகர், தேனி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 தொகுதிகளில் ம.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.இதில் தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரான புதிய தமிழகம் கிருஷ்ணசாமி நிற்கிறார். மற்ற 3 தொகுதிகளிலும் தி.மு.க.வுக்கும், ம.தி.மு.க. வுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் வைகோவை எதிர்த்து ரத்னவேலு போட்டியிடுகிறார்.தூத்துக்குடியில் ம.தி.மு.க. வேட்பாளர் வக்கீல் ஜோயலை எதிர்த்து தி.மு.க. மாவட்ட செயலாளர் பெரியசாமியின் மகன் ஜெகனும், தேனியில் தி.மு.க. வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்தை எதிர்த்து, ம.தி.மு.க. சார்பில் அழகுசுந்தரமும் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தென்காசி தொகுதிக்குட்பட்ட ராஜபாளையத்தில் நடந்த விழாவில் பேசிய அழகிரி, என்னால் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறுகின்றனர்.தென்காசி தொகுதியிலும் எனக்கு ஆதரவு உண்டு. எனது மனைவியின் உறவினர்கள் இங்கு அதிகம் பேர் உள்ளனர். அவர்களின் ஓட்டுகள்தான் தென்காசியில் வெற்றியை தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார்.இதே பாணியில் ம.தி. மு.க. போட்டியிடும் விருது நகர், தென்காசி, தேனி தொகுதிகளிலும் அழகிரி களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த 3 தொகுதிகளிலும் வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்தும் அழகிரி பிரசாரம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவான நிலையை விரைவில் அழகிரி அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி