செய்திகள்,முதன்மை செய்திகள் மாயமான மலேசிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு?…

மாயமான மலேசிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு?…

மாயமான மலேசிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு?… post thumbnail image
மெல்போர்ன்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி பறந்த மலேசிய விமானம், 8ந்தேதி அதிகாலை தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானக்கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.இதையடுத்து அந்த விமானம், தெற்கு சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே பு குவாக் தீவிற்கு 153 மைல் தெற்கே கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த விமானத்தின் ஒரு சின்ன பாகம் கூட கிடைக்கவில்லை.

இதையடுத்து அந்த விமானத்தை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் 26 நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. விமானம் மாயமாகி 2 வாரங்களை எட்டியும், அதுதொடர்பாக உறுதியான எந்த தகவலும் கிடைக்கவில்லை. விமானத்தின் சிதைவுகளும் கிடைக்கவில்லை. இதனால் விமானம் என்ன ஆனது என்பதில் அதில் பயணித்த பயணிகள், சிப்பந்திகளின் குடும்பங்கள் மட்டுமல்ல, உலகமே தீராக் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.இந்நிலையில், அந்த விமானத்தின் தேடுதல் வேட்டையில் ஒரு சிறிய நம்பிக்கைகீற்று தென்பட்டுள்ளது. மாயமாகிப்போன அந்த விமானத்தின் பாகங்கள் என்று கருதப்படுகிற இரண்டு பொருட்கள் இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய நகரமான பெர்த்திலிருந்து 2 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவில், பல்லாயிரம் மீட்டர் ஆழத்திலிருந்து தண்ணீரில் மேலே அடித்து வந்துள்ளன. அவற்றில் ஒன்று 24 மீட்டர் (78 அடிகள்) நீளம் கொண்டது ஆகும். செயற்கைக்கோள் படம் தான் இதைக்காட்டி உள்ளது.இப்போதைக்கு விமான தேடல் வேட்டையில் இதுதான் மிகச்சிறந்த திருப்புமுனை என ஆஸ்திரேலிய அதிகாரிகள் வர்ணித்தனர். ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பிரதமர் டோனி அப்பாட் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். மேலும் இதுபற்றி அவர் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.செயற்கைக்கோள் படத்தின் அடிப்படையில், இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் மாயமான விமானத்தின் சிதைவுகள் என்று கருதப்படக்கூடிய இரண்டு பொருட்களை கண்டறியப்பட்டுள்ள தகவல், ஆஸ்திரேலிய கடற்பாதுகாப்பு ஆணையத்துக்கு வந்துள்ளது என டோனி அப்பாட் தெரிவித்தார்.

அந்த பொருட்களை கண்டெடுப்பதற்காக ஆஸ்திரேலிய விமானப்படை விமானம் ஆரியன் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விமானத்தை மேலும் 3 விமானங்கள் பின்தொடர்ந்து செல்வதாகவும் அவர் கூறினார். வியாபார கப்பல் ஒன்றும் அங்கு திருப்பி விடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவற்றை கண்டுபிடித்து கைப்பற்றுவது என்பது மிகவும் கடினமான காரியம் என்றும், ஒரு வேளை அவை விமானத்தின் சிதைந்த பாகங்களாக இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.மேலும் விமானத்தின் சிதைந்த பாகங்கள் என கருதப்படுகிற அந்த பொருட்கள், சரக்கு கப்பல்களில் இருந்து கண்டெய்னர்கள் தவறி கடலில் விழுகிறபோது, விழுந்து விட்ட பொருட்களின் சிதைவாகவும் இருக்கக்கூடும் என ஆஸ்திரேலிய கடற்பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரி ஜான் யெங் கூறி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.ஆஸ்திரேலிய பிரதமரின் அறிவிப்பை மலேசிய போக்குவரத்து மந்திரி ஹிசாமுதீன் உசேன் உறுதி செய்தார். விமான தேடல் வேட்டையில் சலித்துப்போன உலக நாடுகளின் மத்தியில், இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் என்று கருதப்படுகிற 2 பொருட்களும் கடலில் இருந்து மீட்கப்பட்டு, அவை அந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் தான் என உறுதி செய்யப்பட்டு விட்டால், அந்த விமானம் விபத்துக்குள்ளாகி அல்லது நாச வேலையில் சிக்கி கடலில் மூழ்கி விட்டது என்பது உறுதி செய்யப்பட்டு விடும்.அதுமட்டுமின்றி, அந்த விமானத்தின் கறுப்பு பெட்டி ஒலி, தகவல் பதிவு கருவிகள் மீட்கப்பட வழி பிறக்கும். அவையும் கிடைத்து விட்டால் விமானம் மாயமான கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன என்பது அம்பலத்துக்கு வந்து விடும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி