செய்திகள் மாயமான மலேசிய விமானத்தின் துண்டுகள் கண்டுபிடிப்பு?…

மாயமான மலேசிய விமானத்தின் துண்டுகள் கண்டுபிடிப்பு?…

மாயமான மலேசிய விமானத்தின் துண்டுகள் கண்டுபிடிப்பு?… post thumbnail image
சிட்னி:-மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் மலேசிய விமானம் ஒன்று கடந்த 8-ம் தேதி புறப்பட்டது. பறக்கத் துவங்கிய ஒரு மணி நேரத்தில் அந்த விமானம் ரேடாரிலிருந்து மறைந்துபோனது. பல நாடுகளும் மாயமான இந்த விமானம் குறித்த தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளபோதும் எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் செயற்கைக்கோள் ஒன்றில் இந்தியப் பெருங்கடலில் இரண்டு துண்டுகள் மிதப்பது போன்ற காட்சி தென்பட்டுள்ளது. இதனால் அவை மலேசிய விமானத்தின் துண்டுகளாக இருக்கலாம் என்ற ஐயத்தினை உறுதி செய்துகொள்ள விமானம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியக் கடல் பாதுகாப்பு ஆணையத்திற்கு (ஏஎம்எஸ்ஏ) கிடைத்துள்ள தகவலின்படி தெற்கு இந்தியப் பெருங்கடலில் மிதக்கும் இரண்டு பொருட்கள் காணாமற்போன விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என்ற ஐயத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கிடமும் பேசியதாகத் தெரிவித்த அவர் இந்தத் துண்டுகள் பற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். இந்தப் பொருட்களைக் கண்டுபிடிக்கும் பணி கடுமையானதாக இருக்கும். இறுதியில் அவை விமானத்தைச் சேர்ந்தவையாக இல்லாமலும் இருக்கலாம் என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் கூறினார்.

முன்னதாக அனுப்பப்பட்ட விமானத்தைத் தொடர்ந்து இன்னும் மூன்று விமானங்களும் இந்தப் பணியில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தத் தகவல் பற்றிய செய்தியாளர் கூட்டமொன்றும் கான்பெர்ராவில் நடத்தப்படும் என்று ஏஎம்எஸ்ஏ தெரிவித்துள்ளது.லாவோசிலிருந்து காஸ்பியன் கடல் வரையிலான வடக்குப் பகுதியிலும், மேற்கே இந்தோனேசியா, சுமத்ரா தீவுகளிலிருந்து ஆஸ்திரேலியா வரையிலான தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியிலுமான இரு பிரிவுகளாக இந்தத் தேடுதல் வேட்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் தென்பகுதியில் ஆஸ்திரேலியா அமெரிக்க கப்பற்படையின் துணையுடன் முன்னணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி