செய்திகள் கிரிமியா தனி நாடாக அங்கீகரிப்பு!…

கிரிமியா தனி நாடாக அங்கீகரிப்பு!…

கிரிமியா தனி நாடாக அங்கீகரிப்பு!… post thumbnail image
மாஸ்கோ:-பொருளாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைப்பதாக இருந்த திட்டத்தை கடைசி நேரத்தில் ரஷியாவின் ஆதரவாளரான அதிபர் விக்டர் யனுகோவிச் மறுக்கவே அங்கு மக்களின் போராட்டம் தொடங்கியது.

கடந்த நவம்பரில் தொடங்கிய இந்தப் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியதன் விளைவாக விக்டர் யனுகோவிச் தனது அதிபர் பதவியைத் துறந்து, தப்பியோட நேர்ந்தது. இந்நிலையில், இதற்கு முன்னர் ஐக்கிய ரஷிய குடியரசின் ஒரு பகுதியாக இருந்து, பிரிந்து, தற்போது உக்ரைனின் ஒரு பகுதியாக உள்ள கிரிமியா ரஷ்யாவுடன் மீண்டும் இணைய முடிவெடுத்தது.இந்த முடிவினை ஏற்றுக் கொள்ள அமெரிக்கா, பிரிட்டைன், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் மறுத்து வரும் அதே வேளையில் இந்தத் திட்டத்திற்கு ரஷியா ஆதரவு அளித்தது. கிரிமியாவின் பெரும்பான்மை மக்கள் ரஷியாவுடன் இணைவதற்கான ஆதரவைத் தெரிவித்துள்ளதால் இதுகுறித்து பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

கிரிமியாவை ரஷியா ஏற்றுக் கொண்டதற்கான அடையாளத்தைப் போன்று கிரிமியாவில் ரஷிய ராணுவம் கால் பதித்துள்ளது எதிர்ப்பு நாடுகளின் கண்டனத்துக்குள்ளானது.கிரிமியாவை ரஷியாவுடன் இணைப்பது தொடர்பாக கிரிமியா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும், அதனை தொடர்ந்து நடைபெறவுள்ள வாக்கெடுப்பும் செல்லத்தக்கதல்ல என்று அறிவிக்க வேண்டும் என ஐ.நா.சபையில் அமெரிக்கா ஒரு அவசர தீர்மானத்தை கொண்டு வந்தது.அந்த தீர்மானத்தின் மீது ஐ.நா.பாதுகாப்பு சபையில் இடம் பெற்றிருக்கும் 13 உறுப்பு நாடுகள் நேற்று வாக்களித்தன. அமெரிக்காவின் தீர்மானத்தை தனது ’வீட்டோ’ உரிமையின் மூலம் ரஷியா எதிர்த்தது. ரஷியாவின் நட்பு நாடான சீனா ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்து ஒதுங்கியிருந்தது. இந்நிலையில், கிரிமியாவை ரஷியாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பு (உள்ளூர் நேரப்படி) நேற்று முன்தினம் காலை தொடங்கியது இந்த வாக்கெடுப்பின் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது.

கிரிமியாவின் 97 சதவிகித மக்கள் ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக தேர்தல் கமிஷன் தலைவர் மிகைல் மாலிஷெவ் அறிவித்தார். இதனையடுத்து, கிரிமியாவை இறையாண்மை மிக்க, சுதந்திர, தனி நாடாக அங்கீகரிப்பதற்கான அறிவிப்பில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று கையொப்பமிட்டார்.
இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்ததாகவும், கிரிமியா மக்களின் உணர்வு மற்றும் விருப்பத்துக்கிணங்க சமீபத்திய தேர்தல் முடிவினை கருத்தில் கொண்டு, கிரிமியா இன்று முதல் தனி நாடாக அறிவிக்கப்படுகிறது என ரஷிய அதிபரின் க்ரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.உக்ரைனின் உதவி இனி கிடைக்காது என்பதால் பொருளாதார சீர்குலைவால் திணறும் கிரிமியாவுக்கு மேலும் 250 மில்லியன் டாலர்களை வழங்குவதாகவும் ரஷியா அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள உக்ரைன் நாணயமான ஹ்ரிவ்னாவை அகற்றிவிட்டு இன்னும் ஒரு மாத காலத்துக்குள் ரஷிய நாணயமான ரூஃபிளை அந்நாட்டில் அறிமுகப்படுத்தப் போவதாக கிரிமியா பிரதமர் செர்கெய் அக்ஸ்யொனோவ் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி