செய்திகள்,திரையுலகம் ‘கோச்சடையான்’ படத்தோட நடிப்பை நிறுத்திக்கவா?… ரஜினி கொடுத்த ஷாக்…

‘கோச்சடையான்’ படத்தோட நடிப்பை நிறுத்திக்கவா?… ரஜினி கொடுத்த ஷாக்…

‘கோச்சடையான்’ படத்தோட நடிப்பை நிறுத்திக்கவா?… ரஜினி கொடுத்த ஷாக்… post thumbnail image
சென்னை:-”எல்லோரும் ’16 வயதினிலே’ படத்துல நான் பேசின ‘இது எப்படி இருக்கு..?’ டயலாக், நானா சொந்தமா பேசினதுன்னு நினைச்சுட்டு இருக்காங்க அது தப்பு. உண்மையிலேயே அந்த வசனத்தை எழுதுனது பாக்யராஜ். அதுமட்டுமல்ல… நான் எப்படி பேசணும்னு டயலாக் மாடுலேஷன் சொல்லிக்கொடுத்ததும் பாக்யராஜ் சார்தான்!”- பாக்யராஜ் மகன் சாந்தனு நடித்த பாரிஜாதம் படவிழாவில் இப்படி ரஜினி பேச, கூச்சத்தில் நெளிந்தார் பாக்யராஜ். இந்த விழா நடந்தது 2006-ம் ஆண்டு. சமீபத்தில் ரஜினியை அவரது போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்திருக்கிறார் கே.பாக்யராஜ். திடீர் சந்திப்பு பற்றி இயக்குநர் கே.பாக்யராஜிடம் பேசினோம்.

”என்னோட பத்திரிகையாள நண்பர் தமிழ்வாணன் அவரோட மனைவி குழந்தைகளோட என் வீட்டுக்கு வந்திருந்தார். ‘என் பெண் குழந்தைக்கு பிறந்த நாள்… நீங்க ஆசிர்வதிக்கணும்’னு சொன்னார். நானும் உச்சிமுகர்ந்து ஆசிர்வதித்தேன். ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தவர், ‘சார் என்னோட குழந்தையை ரஜினி சார் ஆசிர்வாதம் செய்யணும். அதுக்கு நீங்கதான் உதவி செய்யணும்’னு கேட்டார். பொதுவாக நான் யாரையும் ரஜினியிடம் அழைத்துப்போய் அறிமுகப்படுத்திப் பழக்கம் இல்லை. ஆனாலும், என் நண்பர், குழந்தை சமாசாரத்தைச் சொன்னதால் என்னால் தவிர்க்க முடியவில்லை. ரஜினிக்கு போன் செய்தேன்.
மறுமுனையில் பேசின ரஜினி, ‘என்ன சார் இப்படி சொல்றீங்க! நீங்க இதுமாதிரி எல்லாம் கேட்டதே இல்லையே… நான் வீட்லதான் இருக்கேன் அழைச்சுட்டு வாங்க!’ என்றார். நான் அந்தப் பத்திரிகையாளர் குடும்பத்துடன் ரஜினி வீட்டுக்குப் போனேன். குழந்தையை ஆசிர்வாதம் செய்து அனுப்பிவிட்டு, ‘வாங்க கொஞ்சம் பேசலாம்’னு தனியாக அழைச்சுகிட்டுப் போனார்.”

”என்ன பேசினாரு ரஜினி?”

” ‘தமிழ் சினிமாவுல யங் ஸ்டார்ஸ் நிறைய பேர் நடிக்க வந்துட்டாங்க. இனி நான் தொடர்ந்து நடிச்சு என்ன ஆகப்போகுது? அதனால, ‘கோச்சடையான்’ படத்தோட நடிப்பை நிறுத்திக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க…’ என்று படபடன்னு பேசினார் ரஜினி. நான் அதிர்ந்துட்டேன்.’என்ன ரஜினி திடீர்னு இப்படிப் பேசுறீங்க… உங்களுக்கு என்னாச்சு? உங்ககூட ஆரம்பத்துல இருந்து சினிமாவுல நடிக்க வந்தவங்க நிறைய பேர் இப்போ ஃபீல்டுலயே இல்லை. இருக்கிற சிலரும் அப்பா, சித்தப்பான்னு சின்னச் சின்ன ரோல் பண்ணிட்டு இருக்காங்க. அப்போ இருந்து இப்போ வரைக்கும் சூப்பர் ஸ்டார்னா அது நீங்க மட்டும்தான். இந்தப் பெருமையும் புகழும் யாருக்கும் கிடைக்காது. உங்க உதட்டுல இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளையும் தமிழ் மக்கள் ரசிச்சு ரசிச்சு சந்தோஷப்படுறாங்க. இப்போ எதுக்கு நீங்க நெகட்டிவா யோசிக்கிறீங்க? ‘கோச்சடையான்’ வெளியானதும் நீங்க அடுத்த படத்துக்கான அறிவிப்பை உடனே வெளியிடணும்’னு சொன்னேன்.அதுக்கு ரஜினி, ‘உங்ககிட்ட சொன்ன இதே விஷயத்தை அமிதாப் சார்கிட்டயும் சொன்னேன். அவரும் இதே பதிலைத்தான் சொன்னாரு. எப்படி ரெண்டு பேரும் ஒரே மாதிரி பேசுறீங்க’னு கேட்டு குழந்தை மாதிரி சிரிச்சாரு.”

”அரசியல் பற்றி ஏதாவது பேசினாரா?”

”எல்லாப் பத்திரிகைகளையும் தவறாமல் படிக்கிறார். குறிப்பாக எல்லா அரசியல் செய்திகளையும் வரிவிடாமல் வாசிக்கிறார் ரஜினி. அரசியலைப் பற்றி யாரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளும் நிலையில் அவர் இல்லை. அதைப் பற்றி என்னிடம் பேச வேண்டிய அவசியமும் இல்லை. அரசியலில் அவர் தெளிந்த நிலையில் இருக்கிறார் என்பது மட்டும் நிஜம்!” என்றார் கே.பாக்யராஜ்.’கோச்சடையான்’ படத்தை அடுத்து, ராக்லைன் நிறுவனம் தயாரிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், ரஜினி – அனுஷ்கா நடிக்கவிருப்பது கோலிவுட்டின் ஹாட் டாக்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி