செய்திகள்,திரையுலகம் பனிவிழும் மலர்வனம் (2014) திரை விமர்சனம்…

பனிவிழும் மலர்வனம் (2014) திரை விமர்சனம்…

பனிவிழும் மலர்வனம் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நாயகன் அபிலாஷும், நாயகி சானியாதாராவும் பேஸ்புக் மூலம் காதல் செய்கிறார்கள். இருவரும் ஒருநாள் நேரில் சந்தித்து தங்களுடைய காதலை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்களுடைய காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அதனால், ஊரைவிட்டு செல்ல முடிவெடுத்து அதன்படி வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். எங்கு செல்வதென்று முழித்துக் கொண்டிருக்கும் வேளையில், முதலில் வரும் பஸ்ஸில் ஏறி தேனிக்கு செல்கிறார்கள். தேனி வந்து சேர்ந்த பின் காதல் ஜோடி அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து செல்லும் போது மர்ம கும்பல் ஒன்று இவர்களை தாக்குகிறது.அப்போது அங்கு வரும் வர்ஷா, அந்த கும்பலிடமிருந்து இவர்களை காப்பாற்றி தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். மர்ம கும்பலுடனான மோதலில் தன் மகனின் வைத்திய செலவுக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை வர்ஷா பறிகொடுக்கிறார். தங்களை காப்பாற்றிய வர்ஷாவுக்கு நாயகனும், நாயகியும் உதவ முன்வருகிறார்கள்.தாங்கள் கொண்டுவந்த பொருட்களையெல்லாம் விற்று அவருக்கு பணத்தை கொடுக்கின்றனர். ஒருவழியாக பணத்தை எடுத்துக்கொண்டு காட்டு வழியாக அனைவரும் பயணிக்கிறார்கள். அப்போது ஒரு புலியின் கண்ணில் இவர்கள் அனைவரும் பட்டுவிடுகிறார்கள்.

புலி அவர்களை துரத்த அனைவரும் ஓடிச்சென்று ஒரு மரத்தின் மேலே உட்கார்ந்து விடுகிறார்கள். புலி அவர்களை விட்டு செல்லாமல் அங்கேயே சுற்றி சுற்றி வருகிறது. மறுபுறம், வர்ஷாவின் மகன் நோயின் தாக்கத்தால் ரொம்பவும் அவதிப்படுகிறான். இறுதியில் புலியை விரட்டி அந்த சிறுவனை காப்பாற்றினார்களா? அல்லது புலிக்கு இரையானார்களா? என்பதே மீதிக்கதை.நாயகன் அபிலாஷ் புதுமுகம் என்றாலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடும் காட்சியில் அட்டகாசமாக நடித்திருக்கிறார். நாயகி சானியதாராவும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.வர்ஷா அஸ்வதி, ஒரு குழந்தையின் தாயாக பாசம் காட்டுவதில் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இறுதியில், தனது மகனின் உயிரை காப்பாற்ற தன்னையே பலியாக்கிக் கொள்வது தாய்மையின் உச்சக்கட்டம்.
வர்ஷாவின் குழந்தையாக நடித்திருக்கும் சிறுவனும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தின் தலைப்பை பார்த்து காதல் படம் என்று திரையரங்குக்குள் வருபவர்களுக்கு படம் தொடங்கிய சிறிதுநேரம் வரை தான் அந்த உணர்வை கொடுத்திருக்கிறார்கள். அதன் பின்னர் படம் வேறு திசையில் நகர்கிறது.பெற்றோர்களின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து கதையை சொல்லவரும் இயக்குனர் ஜேம்ஸ் டேவிட், இத்தனை கொடூரத்தை காட்டவேண்டுமா? என்று நினைக்கத் தோன்றுகிறது. படத்தில் இயற்கையை மையப்படுத்தி வரும் வசனங்கள் கைதட்டல் பெறுகின்றன.ரஜின் இசையில் காட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் திகிலை ஏற்படுத்தியுள்ளன. பாடல்கள் கேட்கும் ரகம். ராகவ் தனது கேமரா கண்களால் தேனி மாவட்டத்தின் இயற்கை அழகை அழகாக படம் பிடித்திருக்கிறார்.
புலியிடம் மாட்டிக்கொண்டு 4 பேரும் தவிக்கும் தவிப்பை திறமையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘பனிவிழும் மலர்வனம்’ ஒரு தாய் அன்பு…..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி