செய்திகள்,திரையுலகம் டி டே திரை விமர்சனம்…

டி டே திரை விமர்சனம்…

டி டே திரை விமர்சனம்… post thumbnail image
மிகப்பெரிய நடிகர்களை வைத்து ‘கல் ஹோ நா ஹோ’, ‘சாந்தினி சவுக் டு சைனா’ போன்ற சமூகத்திற்கு தீங்கு விளைவிக்காத படங்களை கொடுத்து வந்த நிகில் அத்வானி இத்திரைப்படத்தில் மிகவும் ரிஸ்க்கான கருவை தேர்ந்தெடுத்து அதை ஆக்ஷன் த்ரில்லராக தந்திருக்கிறார்.

இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதியான இக்பால் சேத்தை (ரிஷி கபூர்) கைது செய்ய முடிவெடுத்த இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் தலைவர் அஸ்வினி ராவ் (நஸ்ஸார்), ரகசிய உளவாளியாக நாயகன் வாலிகானை (இர்பான் கான்) கராச்சிக்கு அனுப்புகிறார்.

தங்க வியாபாரம் செய்பவராக வெளி உலகத்தில் உலா வரும் இக்பால் சேத் நிழல் உலகில் இந்தியாவிற்கு எதிராக மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்தும் சதி வேலை செய்து வருகிறார்.

இந்த உண்மைகள் தெரிந்தும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல், அந்த அமைப்பு அவருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு வளையமாக விளங்குகிறது. இதனால் அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்ற விவரம் கூட தெரியாமல் தடுக்கப்படுகிறது.

ஆனால் ஒரு சமயத்தில் ஐ.எஸ்.ஐயின் எதிர்ப்பையும் மீறி இக்பால் சேத் தனது மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள முடிவெடுக்கிறார். இதை தெரிந்து கொண்ட நாயகன் வாலி கான் தனது தலைவரான அஸ்வினி ராவிடம் இந்த தகவலை தெரிவிக்கிறார்.

உடனடியாக இருவரும் சேர்ந்து ஆபரேஷன் கோல்டுமேன் என்ற திட்டத்தை தீட்டுகிறார்கள். இத்திட்டத்தில் பெண் வெடிகுண்டு நிபுணரான சோயா ரஹ்மான் (ஹுமா குரேஷி), மும்பையை சேர்ந்த கேடியான அஸ்லாம் (ஆகாஷ் தாஹியா) மற்றும் இந்திய ஆயுதப்படை அதிகாரியான கேப்டன் ருத்ரபிரதாப் சிங் (அர்ஜுன் ராம்பால்) ஆகிய மூன்று பேரை இணைத்துக் கொள்கின்றனர்.

இவர்கள் திட்டமிட்டபடி இக்பால் சேத்தை கைது செய்தார்களா? அல்லது என்கவுண்டர் செய்தார்களா என்பதே மீதி கதை.

நாயகனான இர்பான் கான் அதிரடியாகவும், இயல்பாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தனது மனைவிக்கும், மகனுக்கும் பாசத்தை காண்பிக்கும் அவர், இந்திய தேசத்தை நேசிப்பதிலும், நாட்டை காப்பதில் உறுதியோடு இருப்பதிலும் சிறப்பாக நடித்துள்ளார்.

ஹுமா குரேஷி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். தன் மீதுள்ள வழக்கை ரத்து செய்வதற்காக அஸ்வினி ராவின் திட்டத்தில் பங்கு கொள்ளும் ஆகாஷ் தாகியாவும் நன்றாக நடித்துள்ளார்.

இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள ரிஷி கபூர் வியப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக அவருடைய பார்வை, பேசும் வசனம் மற்றும் டென்ஷனான சூழலில் மராத்தி மொழியில் பேசிக்கொள்வதிலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கராச்சி நகரில் விபச்சாரியாக வரும் ஸ்ருதிஹாசன் உயிரோட்டமாக நடித்து அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட வலியை வெளிப்படுத்துவதில் முதிர்ச்சியான நடிப்பை கொடுத்திருக்கிறார். இப்படத்தில் ஸ்ருதி அருமையான சோகப் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இப்பாடலில் அவரது நடிப்பு தமிழ் ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் என்பது நிஜம். இப்படத்தின் மறக்க முடியாத பாடலாகவும், என்றும் நெஞ்சில் நின்று ரீங்காரமிடும் பாடலாகவும் இந்த பாடல் விளங்கும்.

இரும்பு கவசம் போன்ற கதை, வலுவான பாத்திரங்கள், நம்பக்கூடிய நிகழ்வுகள், சிறப்பான இசை ஆகியவற்றை கொண்ட ஆக்ஷன் திரில்லராக டி டே அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘டி-டே’ போராட்டம்….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி