செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல். சூதாட்டத்தில் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு?…

ஐ.பி.எல். சூதாட்டத்தில் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு?…

ஐ.பி.எல். சூதாட்டத்தில் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு?… post thumbnail image
புதுடெல்லி:- ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரித்த நீதிபதி முகுல் முட்கல், கூடுதல் சொலிசிடர் ஜெனரல் என்.நாகேஸ்வர்ராவ், அசாம் கிரிக்கெட் சங்க நிர்வாகி வக்கீல் நிலே தத்தா ஆகியோர் கொண்ட கமிட்டி, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் 170 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது. அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. சூதாட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடிய 6 வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் முட்கல், தனது அறிக்கையில் எந்த தேசிய வீரரின் பெயரையும் குறிப்பிடவில்லை என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார். நிலே தத்தா தான் தனது அறிக்கையில் 6 இந்திய வீரர்களுக்கு தொடர்பு உண்டு என்பதை கூறியிருக்கிறார். அது பற்றிய விவரம் வருமாறு:- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கும் ‘மேட்ச் பிக்சிங்’ மற்றும் சூதாட்டத்தில் தொடர்பு உண்டு என்று கைது செய்யப்பட்ட சூதாட்ட புரோக்கர் உத்தம் ஜெயின் என்ற கிட்டி, திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஜி.சம்பத்குமார் நடத்திய விசாரணையின் போது கூறியதாக அந்த போலீஸ் அதிகாரி எங்களிடம் தெரிவித்தார்.விக்ரம் அகர்வால் (ஓட்டல் அதிபர்), குருநாத் மெய்யப்பன் (சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர்), கிரிக்கெட் வீரர்கள் டோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் இன்னும் சிலருக்கு மேட்ச் பிக்சிங்கில் என்னென்ன தொடர்பு உண்டு என்பதை தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் உத்தம் ஜெயின் சொல்லியிருக்கிறார்.

கடந்த மே 12-ந்தேதி ஜெய்ப்பூரில் நடந்த சென்னை சூப்பர்கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 130 முதல் 140 ரன்கள் வரை எடுக்கும் என்று குருநாத் மெய்யப்பன் தனது கணிப்பை விண்டூ தாரா சிங்கிடம் (இந்தி நடிகர்) கூறியுள்ளார். அவர் சொன்னது போலவே ஏறக்குறைய நடந்துள்ளது.சென்னை அணி அந்த ஆட்டத்தில் 141 ரன்களே எடுத்தது. ஆனால் இதன் மூலம் வைத்து மட்டுமே குருநாத் மெய்யப்பன், ‘மேட்ச் பிக்சிங்’ செய்தார் என்று அர்த்தம் கிடையாது. ஏனெனில் மெய்யப்பனுக்கு அது தொடர்பான தகவல்கள் நிறைய தெரிந்து இருந்தது. அல்லது அவருக்கு அந்த அணியின் ரகசிய தகவல்கள், திட்டங்கள், ஆட்டத்தின் நிலைப்பாடுகள் அனைத்தையும் எளிதாக பெறும் நிலை இருந்தது.

இது போன்ற தகவல்கள் மற்றவர்களுக்கு கிடைத்திருக்காது. சென்னை-ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டத்தை ‘பிக்சிங்’ செய்வதற்கு ஒரு ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று ஏப்ரல் 27-ந்தேதி நடந்த இரவு விருந்து ஒன்றில் அகர்வால் உத்தம் ஜெயினிடம் கூறியுள்ளார். பின்னர் அதே நாளில் குருநாத் மெய்யப்பன், சீனியர் வீரர் ஒருவர், தங்களது அணி 140 ரன்கள் மட்டுமே எடுப்பது என்ற திட்டத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் அனுப்பியுள்ளார். இந்த தகவல் ஜெய்ப்பூரில் இருந்த சஞ்சய் என்பவருக்கு, அகர்வாலின் மூலம் ஜெயின் முன்னிலையில் போன் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.புரோக்கர் உத்தம் ஜெயின் கூறிய விஷயங்கள் பற்றி தெரிந்த அனைத்து போலீஸ் அதிகாரிகளும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கும் சென்னை சி.பி.சிஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பான விசாரணை அறிக்கையை கேட்ட போது யாரும் தாக்கல் செய்யவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் இது தொடர்பாக முழு அதிகாரம் கொண்ட தனிப்பட்ட விசாரணை முகமை மூலம் விசாரணை நடத்த உத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

இதே போல் இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ஐ.எஸ்.பிந்த்ரா, பிரபலமான இரண்டு இந்திய முன்னாள் வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு உண்டு என்பதை நான் அறிவேன் என்று சொல்லியுள்ளார். சூதாட்டத்தில் சிக்கி தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் டெல்லி போலீசாரிடம், மூன்று முன்னாள் வீரர்களுக்கு சூதாட்டத்தில் பங்கு உண்டு என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விஷயங்களும் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி