செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல். ஏலம் – யுவராஜ் சிங்குக்கு ரூ.14 கோடி…

ஐ.பி.எல். ஏலம் – யுவராஜ் சிங்குக்கு ரூ.14 கோடி…

ஐ.பி.எல். ஏலம் – யுவராஜ் சிங்குக்கு ரூ.14 கோடி… post thumbnail image
பெங்களூர்:-7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஐ.பி.எல் ஏலப்பட்டியலில் 219 சர்வதேச வீரர்கள் உள்பட 514 பேர் இடம் பெற்று இருந்தனர்.

இந்தியர்களில் 169 சர்வதேச வீரர்களும், முதல் தரபோட்டியில் விளையாடிய 255 பேரும் அடங்குவார்கள். மீதியுள்ளவர்கள் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். முதல் முறையாக இந்திய ரூபாய் மதிப்பில் ஏலம் நடத்தப்பட்டது. ரிச்சர்டு மேட்லி இதை நடத்தினார். முதலில் தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் ஏலம் விடப்பட்டார். அவருக்கான அடிப்படை விலை ரூ.2 கோடியாகும்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் அவரை எடுக்க போட்டியிட்டன. இறுதியில் டெல்லி அணி ரூ.5 கோடிக்கு எடுத்தது. கடந்த 6 ஐ.பி.எல். போட்டியிலும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார். அந்த அணி நிர்வாகம் அவரை தக்க வைத்துக்கொள்ள மேட்ச் கார்டை பயன்படுத்த வில்லை. அடுத்து இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே இடம் பெற்று இருந்தார். அவரை எந்த அணியும் வாங்கவில்லை.இங்கிலாந்தை சேர்ந்த நட்சத்திர வீரர் பீட்டர்சன் ஏலத்துக்கு விடப்பட்டார். அவரை எடுக்க கடும் போட்டி இருந்தது. டெல்லி அணி ‘மேட்ச்’ கார்டை பயன்படுத்தி அவரை ரூ.9 கோடிக்கு எடுத்தது. 20 ஓவர் போட்டி நாயகனாக யுவராஜ்சிங் அதிக தொகையான ரூ.14 கோடிக்கு ஏலம் போனார். அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எடுத்தது. நிர்ணயிக்கப்பட்டதை விட (2 கோடி) அவர் 7 மடங்கு விலைக்கு போனார்.

கொல்கத்தா அணிக்கும், பெங்களூர் அணிக்கும் யுவராஜ் சிங்கை எடுக்க கடும் போட்டி இருந்தது. இதனால் தான் அவரது விலையும் உயர்ந்தது. இறுதியில் பெங்களூர் அணி எடுத்தது. தென்ஆப்பிரிக்கா வீரர் காலிசை ரூ.5 ½ கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எடுத்தது.சென்னை அணியிடம் இருந்து மேட்ச் கார்டை பயன்படுத்தி கொல்கத்தா அணி அவரை வாங்கியது. அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்த ஷேவாக் ரூ.3.2 கோடிக்குத் தான் விலை போனார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை எடுத்தது. டெல்லி அணி அவரை ஏலத்தில் எடுத்து தக்க வைத்துக்கொள்ள விரும்பவில்லை.அடுத்து ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னரை ஐதராபாத் அணி ரூ.5½ கோடிக்கு எடுத்தது. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு அதிக மவுசு இருந்தது. அவரை ரூ.12½ கோடிக்கு டெல்லி அணி எடுத்தது. அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 6 மடங்குக்கு அதிகமாக விலை போனார். டூபெலிசிசை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ4.75 கோடிக்கு தக்க வைத்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி