அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் நரேந்திர மோடியின் கனவு திட்டங்கள்…

நரேந்திர மோடியின் கனவு திட்டங்கள்…

நரேந்திர மோடியின் கனவு திட்டங்கள்… post thumbnail image
டெல்லி:-மோடி பிரதமர் ஆவாரா? மாட்டாரா? இது தான் இன்று சாதாரண மக்கள் வரை நடைபெறும் விவாதம்.மோடி பிரதமர் ஆனால் இந்தியா எப்படி இருக்கும்? என்னென்ன திட்டங்களை செயல்படுத்துவார்? என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் உள்ளது.

மோடி பிரதமர் ஆக வந்தால் மத வாதம் வரும். டீ விற்கத்தான் அவர் லாயக்கு.என்ற காங்கிரஸ்காரர்கள் விமர்சனம் செய்தபடி உள்ளனர். அவர்களுக்கு பதிலடி கொடுத்து நேற்று டெல்லியில் நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசினார்.

நாடு முழுவதிலும் இருந்து திரண்டு இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளிடம் இந்தியாவை முன்னேற்ற தனது கனவு திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.கிட்டத்தட்ட பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை போலவே அவரது பேச்சு அமைந்து இருந்தது. அவர் பேசியதாவது:–நான் சிறிய வயதில் டீ விற்றவன்தான். டீ விற்று இன்று மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் அளவுக்கு உயர்ந்துள்ளேன்.நான் டீ விற்றதை குறை கூறி காங்கிரசார் விமர்சிக்கிறார்கள். ஆனால் நாட்டில் உள்ள டீ விற்பனையாளர் ஒவ்வொருவரும் தங்களில் ஒருவன் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் அளவுக்கு உயர்ந்து இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறார்கள்.

இந்தியா சர்வதேச அளவில் முன்னோடியாக திகழ 5 டீ அவசியம். டேலன்ட் (திறமை), டிரேட் (வர்த்தகம்), டிரெடிஷன் (பாரம்பரியம்), டூரிசம் (சுற்றுலா), டெக்னாலஜி (தொழில்நுட்பம்) ஆகிய ‘5 டி’யும் முக்கியம். அதை நோக்கிய பார்வையுடன் பா.ஜனதா செயல்படும்.பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த டீ விற்றவனுக்கு எதிராக போட்டியிடுவதை அவர்கள் கவுரவ குறைச்சலாக கருதுகிறார்கள். இது அவர்களின் நிலப்பிரபுத்துவ மனோபாவத்தை காட்டுகிறது.மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நாடு கருப்பு நாள்களை மட்டுமே சந்தித்து வருகிறது. தவறான விவசாய கொள்கைகளால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள். இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்பு இல்லை. பெண்களுக்கு பல மாநிலங்களில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. சரியான கொள்கையும், நிலையான தலைமையும் இல்லாமல் நாடு தவிக்கிறது.

காங்கிரஸ் பாரம்பரியத்தில் பிரதமர் வேட்பாளரை முன் கூட்டியே அறிவிக்கும் வழக்கம் இல்லை என்கிறார்கள். ஆனால் இந்திரா மறைவுக்கு பிறகு 1984–ல் ராஜீவ் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார்கள்.2004–ம் ஆண்டும் சோனியா பிரதமர் ஆவார் என்று தான் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் அவர் மன்மோகன்சிங்கை பிரதமர் ஆக்கினார்.ஆனால் இப்போது பிரதமர் வேட்பாளரை அறிவிக்க தயங்குகிறது. என்ன காரணம்? வருகிற தேர்தலில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்க உள்ளது. தோல்வி நிச்சயம் என்ற கலக்கத்தில்தான் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. தோல்வி உறுதி என்று தெரிந்த பிறகு எந்த தாய்தான் தனது மகனை பலிகடா ஆக்க விரும்புவார். அந்த தாயின் இதயம் மகனை பாதுகாக்க முடிவு செய்து விட்டது.

பிரதமர் மன்மோகன்சிங் மாதம் தோறும் ஏதாவது ஒரு விவகாரம் தொடர்பாக குழு அமைப்பதையே பணியாக கொண்டுள்ளார். இந்த மாதிரி குழுக்களால், கொண்டு வரப்படும் சட்டங்களால் மட்டுமே நாட்டை வழி நடத்திட முடியாது.
தூய்மையான அரசியல் எண்ணம், நல்ல ஆளுமை, வளர்ச்சி, சேவை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் உண்மையான ஈடுபாடு தான் நமக்கு தேவை.நல்லாட்சி என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பது அல்ல. கடந்த 60 ஆண்டுகள் நாட்டை காங்கிரசிடம் ஒப்படைத்தது போதும். இனி 60 மாதங்கள் நாட்டை வழி நடத்தும் பொறுப்பை எங்களுக்கு வழங்குங்கள். நல்ல மாற்றத்தை நிச்சயம் கொண்டு வருவோம்.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் கலவரங்கள் இல்லாத தர்மத்தின் ஆட்சி நடைபெறும். அனைத்து வழிபாட்டு முறைகளும் சமமாக மதிக்கப்படும். பெண்கள் மதிக்கப்படுவார்கள்.கலாச்சாரம், வேளாண்மை, பெண்கள் நலன், இயற்கை வளங்கள், இளைஞர் நலன், ஜனநாயகத்தை காப்பது, அறிவுத்திறன் மேம்படுத்துதல் ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்தப்படும்.100 நகரங்கள் அனைத்து வசதிகளும் கொண்ட முன் மாதிரி நகரங்களாக உருவாக்கப்படும்.அனைத்து மாநிலங்களிலும் ஐ.ஐ.எம், ஐ.ஐ.டி எய்ம்ஸ் ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்.நாடு முழுவதும் தொலை தொடர்பை மேம்படுத்த கண்ணாடி இழைகள் பதிக்கப்படும். நதிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கொண்டு வந்த தங்க நாற்கர சாலை திட்டத்தை போல் புல்லட் ரெயில் பாதை அமைக்கும் திட்டம் கொண்டு வரப்படும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி சீராக வைத்து இருப்பதற்காக தனி நிதியம் அமைக்கப்படும்.கள்ளக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படும். வெளி நாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வருவோம்.
விவசாய உற்பத்தி தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டு அதற்கேற்ப ஏற்றுமதி தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். தேசிய விவசாய சந்தை உருவாக்கப்படும்.

மத்திய ஆட்சிக்கு இணையாக மாநில அரசுகளும் நடத்தப்படும். நல்லாட்சி பணக்காரர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்காது. ஏழைகள், தலித்துகள், நலிவடைந்த பிரிவினரின் தேவைகளான பள்ளிகள், மருத்துவமனைகளை உருவாக்கி தருவது தான் நல்லாட்சி. அதை தருவோம். நாம் கூடி வாழ்ந்தால் தான் பலம். அதை உறுதிப்படுத்துவோம். இவையே எனது சிந்தனை.இவ்வாறு அவர் பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி