செய்திகள்,விளையாட்டு கழற்றி விடப்பட்ட ஷேவாக்…

கழற்றி விடப்பட்ட ஷேவாக்…

கழற்றி விடப்பட்ட ஷேவாக்… post thumbnail image
புதுடெல்லி:-7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந்தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் பிப்.13-தேதியும் ஏலம் தொடரும். இதில் அனைத்து வீரர்களும் புதிதாக விற்கப்படுகிறார்கள்.

அதே நேரத்தில் ஒவ்வொரு அணிகளும் முந்தைய சீசனில் விளையாடிய வீரர்களில் இருந்து அதிகபட்சமாக 5 வீரர்களை தொடர்ந்து தங்கள் அணிகளில் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும், அப்படி தக்கவைக்கப்படும் வீரர்களுக்கு ரூ.12.5 கோடி, ரூ.9.5 கோடி, ரூ.7.5 கோடி, ரூ.5.5 கோடி, ரூ.4 கோடி வீதம் சம்பளமாக ஒதுக்க வேண்டும் என்றும், சர்வதேச போட்டியில் ஆடாத வீரர் தக்க வைக்கப்பட்டால் அவருக்கு ரூ.4 கோடி ஊதியமாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டது.எந்தெந்த வீரர்கள் தக்க வைக்கப்படுகிறார்கள் என்ற பட்டியலை சமர்ப்பிக்க நேற்று கடைசி நாளாகும். இதன்படி 8 அணி நிர்வாகங்களும் அந்த விவரங்களை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி அதிரடியாக, எந்த வீரரையும் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளது. அந்த அணியின் உள்ளூர் நாயகன் 35 வயதான ஷேவாக் பார்மில் இல்லை. ரஞ்சி கிரிக்கெட்டில் 13 இன்னிங்சில் விளையாடி ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். ஓராண்டுக்கு மேலாக ரன் குவிக்க முடியாமல் திணறி வருவதால் அவரை வைத்துக் கொள்ள டெல்லி அணிக்கு விருப்பம் இல்லை. இதனால் தங்கள் அணியில் இருந்து அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுவித்து விட்டு, இந்த சீசனில் புத்தம் புதிய அணியை தேர்வு செய்யும் முடிவுக்கு டெல்லி அணி வந்துள்ளது.

முதல் மூன்று சீசனில் முத்திரை வீரர் அந்தஸ்துடன் அதிரடி காட்டிய ஷேவாக், அடுத்த மூன்று தொடர்களிலும் அந்த அணியில் நீடித்தார். இந்த நிலையில் ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக ஷேவாக் ஏலம் மூலம் விற்கப்பட இருக்கிறார். அவருடன் சேர்த்து மஹேலா ஜெயவர்த்தனே, டேவிட் வார்னர், கெவின் பீட்டர்சன், உன்முக் சந்த் ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்களும் ஏலத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனாலும் மேட்ச் கார்டு சலுகையை பயன்படுத்தி ஏலத்தின் போது ஷேவாக்கை மறுபடியும் டெல்லி அணி வாங்குவதற்கு வாய்ப்புள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி