செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்.அணிகள் தக்க வைக்கும் வீரர்கள்…

ஐ.பி.எல்.அணிகள் தக்க வைக்கும் வீரர்கள்…

ஐ.பி.எல்.அணிகள் தக்க வைக்கும் வீரர்கள்… post thumbnail image
பெங்களூர்:-7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 12-ந்தேதி நடக்கிறது. இதில் அனைத்து வீரர்களும் புதிதாக ஏலம் விடப்படுகிறார்கள்.

அதே சமயம் ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக தங்கள் அணியில் முந்தைய சீசனில் விளையாடிய 5 வீரர்களை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை இன்று அணி நிர்வாகங்கள் வெளியிட வேண்டும்.இந்நிலையில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் விவரத்தை அறிவித்துள்ளது. அந்த அணி கேப்டன் விராட் கோலி, அதிரடி வீரர்கள் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் ஆகியோரை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அவர்களுக்கு முறையே ரூ.12.5 கோடி, ரூ.9.5 கோடி, ரூ.7.5 கோடி வீதம் சம்பளமாக கிடைக்கும். பெங்களூர் அணி மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைத்திருப்பதால், அந்த அணிக்கு ஒரு ‘மேட்ச் கார்டு’ வழங்கப்படும். இந்த சலுகையை பயன்படுத்தி தங்கள் அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரரை அந்த அணியால் ஏலத்தின் போது வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தென்ஆப்பிரிக்காவின் ஆலன் டொனால்டு பந்து வீச்சு பயிற்சியாளராகவும், டிரென்ட் உட்ல் பேட்டிங் மற்றும் பீல்டிங் ஆலோசகராகவும் செயல்படுவார்கள்.
விராட் கோலி கூறுகையில், ‘பெங்களூர் அணி தொடர்ந்து என்னை தக்க வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வெட்டோரி, டொனால்டுவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்’ என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்வது என்பதில் குழம்பி போய் உள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மாவும், ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட்டும் நீடிப்பது உறுதியாகி உள்ளது. தக்க வைக்கும் வீரர்களில் 2-வது வெளிநாட்டு வீரர் இடத்திற்கு மிட்செல் ஜான்சன், மலிங்கா இடையே போட்டி நிலவுகிறது. ஹர்பஜன்சிங், தினேஷ் கார்த்திக், அம்பத்தி ராயுடு ஆகியோரது பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் நிச்சயம் தொடருவார்கள் என்று நம்பப்படுகிறது. மற்றொரு இடத்திற்கு வெய்ன் பிராவோ, பாப் டு பிளிஸ்சிஸ், மைக் ஹஸ்சி ஆகியோரில் ஒருவர் இடம் பெற வாய்ப்புள்ளது.

அவுட் ஆப் பார்மில் உள்ள ஷேவாக், டெல்லி அணியில் இருந்து கழற்றி விடப்படலாம் என்று தெரிகிறது. அந்த அணியை பொறுத்தவரை டேவிட் வார்னர், கெவின் பீட்டர்சன் ஆகியோரை வைத்துக் கொள்வது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் ஷிகர் தவான், ஸ்டெயின், குயின்டான் டி காக் ஆகியோரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வாட்சன், ரஹானே, சஞ்சு சாம்சன், ஜேம்ஸ் பவுல்க்னெர் ஆகியோரும் தொடருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த அணிகளில் யார்-யார் நீடிப்பார்கள் என்பது இன்றுக்குள் முடிவாகி விடும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி