அரசியல்,முதன்மை செய்திகள் ஜெயலலிதாவின் சூப்பர் ப்ளான்…வேலைக்கு ஆகுமா…

ஜெயலலிதாவின் சூப்பர் ப்ளான்…வேலைக்கு ஆகுமா…

Tamilnadu cheif minister Jayalaitha

காணொளி:-

தமிழக பஸ்களில் ‘GPS’ உதவியுடன் மின்னணு பயணச் சீட்டுகள் அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டம். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா சட்டபேரவையில் ஆற்றிய உரை…

மக்களை இணைப்பதிலும்; நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதிலும்; நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் சாலைப் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்படி இன்றியமையாததாக விளங்கும் சாலைப் போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு, குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு அளித்து வரும் அரசு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்துவதும்; அதன் தொழிலாளர்கள் மற்றும் பயணிகளின் வசதிகளை அதிகரிப்பதும் அவசியமாகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, அரசு பேருந்துகளை இயக்குகின்ற 45 வயதிற்கு மேற்பட்ட ஓட்டுநர்கள் உடல் தகுதியினை அறிந்து, உடல் நலக் குறைவு ஏதேனும் இருப்பின் அதற்கான மருத்துவ வசதி பெற்றுக் கொள்ளும் வகையில், சாலை போக்குவரத்து நிறுவனத்தின் கீழ் இயங்கும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆண்டுக்கு ஒரு முறை “முழு உடல் பரிசோதனை” செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் தற்போது கருணை அடிப்படையில் பணிபுரிந்து வரும் 338 வாரிசுதாரர்களின் பணி வரன்முறை செய்யப்பட்டு அவர்களது பணி நிரந்தரம் செய்யப்படும் என்பதையும்; பணியில் இருக்கும் போது இறந்து போன பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பதிவு மூப்பின் அடிப்படையில், முதற்கட்டமாக ஒரு போக்குவரத்துக் கழகத்திற்கு 50 பணியிடங்கள் என்ற அடிப்படையில், 400 தொழில்நுட்ப காலி பணியிடங்கள் தொழில்நுட்ப பணி அல்லாத பழகுநர்களுக்கு மூன்று ஆண்டு பயிற்சி அளித்து நிரப்பப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஓய்வு பெற்றும், ஓய்வூதியப் பயன்களை பெறாத தொழிலாளர்களின் நிலையினை கருத்தில் கொண்டு, 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஓய்வு பெற்ற 2,316 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையான 47 கோடியே 71 லட்சம் ரூபாய் இந்த மாதத்திலேயே வழங்கப்படும்.

இதே போன்று, 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெற உள்ள 4,688 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையான 96 கோடியே 57 லட்சம் ரூபாய் நடப்பு நிதியாண்டில் வழங்கப்படும்.

அரசு போக்குவரத்துக் கழகங்களின் வழித் தடப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதை கருத்தில் கொண்டு, 31.3.2013 வரை ஓய்வு பெறவுள்ள பணியாளர்களின் பணியிடங்களையும் உள்ளடக்கி, 6,910 ஓட்டுநர்கள், 7,402 நடத்துநர்கள் மற்றும் 2,349 தொழில்நுட்பப் பணியாளர்கள் என மொத்தம் 16,661 பணியிடங்கள் நிரப்பப்படும்.

இந்தப் பணியிடங்களில், 4,511 பதிலி ஓட்டுநர்கள், 4,558 பதிலி நடத்துநர்கள் மற்றும் 88 பதிலி தொழில்நுட்பப் பணியாளர்கள் என மொத்தம் 9,157 பதிலிப் பணியாளர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவார்கள்.

அரசுத் துறையின் அனைத்து வாகனங்களையும் பராமரித்து வரும் அரசு மத்திய தானியங்கி பணிமனை தனது பராமரிப்புப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளும் வகையில், மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 398 தொழில்நுட்பப் பணியிடங்கள் மற்றும் 171 பிற பணியிடங்கள் என மொத்தம் 569 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

பயணிகள் எளிதாக பயணச் சீட்டினை பெறும் வகையில், புவி இருப்பிட முறைமை வசதி கொண்ட கையடக்க இயந்திரங்களைப் (GPS) பயன்படுத்தி மின்னணு பயணச் சீட்டு வழங்கும் முறை அனைத்து பேருந்துகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.

அரசு போக்குவரத்துக் கழகங்களால் 300 கிலோ மீட்டருக்கு மேல் இயக்கப்படும் தொலைதூர வழித்தட இயக்கத்தினை சீரமைக்கும் சீரிய நோக்கத்தின் அடிப்படையில், தொலைதூர வழித் தடப் பேருந்துகள் இனி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும். இதன் காரணமாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தடப் பேருந்துகளின் எண்ணிக்கை 905-லிருந்து 1,761-ஆக அதிகரிக்கப்படுவதை அடுத்து, ஸ்ரீரங்கம், திண்டுக்கல், தேனி, காரைக்குடி, கரூர், ஈரோடு மற்றும் ஓசூர் ஆகிய ஏழு இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்கப்படும் என்பதையும்; கூடுதல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பொது மேலாளர் அலுவலகம் ஒன்று தோற்றுவிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மட்டுமல்லாமல், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்ற அளவிற்கு பணிமனைகள் இல்லாததைக் கருத்தில் கொண்டு, சென்னை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகங்களால் தமிழ்நாடு முழுவதும் 25 புதிய பணிமனைகள் அமைக்கப்படும்.

எனது அரசின் இந்த நடவடிக்கைகள் காரணமாக, போக்குவரத்துக் கழகங்களின் சேவை மேலும் செம்மையுறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி