திரையுலகம் ‘தா’ எப்படிங்க…

‘தா’ எப்படிங்க…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

இந்த படமும் நூறோடு நூற்றி ஒன்றுதான் என நினைத்து உள்ளே போனால், அந்த எண்ணத்தை வேரோடு பிடுங்கி எறிந்திருக்கிறார் புதுமுக இயக்குனர் சூரிய பிரபாகர். சைட்ல பார்த்தா சசிகுமார், சட்டுன்னு பார்த்தா பாக்யராஜ் என்று கலந்து கட்டி அடித்திருக்கும் இவரது ‘ஸ்க்ரீன் ப்ளே’ ஸ்டைலுக்கு முதலில் ஒரு பொக்கே!

“எனக்கு இன்னைக்கு கல்யாணம். இதோ பக்கத்துல உட்கார்ந்திருக்காளே என் பெண்டாட்டி. இவளை கட்டிக்க நான் எத்தனை பேரை உதைச்சிருக்கேன். என்னென்ன நடந்திருக்கு தெரியுமா?” என்று கதை சொல்ல ஆரம்பிக்கிறார் ஹீரோ ஸ்ரீஹரி. அப்புறம் நம் கையை பிடித்துக் கொண்டு ஓட்டமாய் ஓடுகிறது திரைக்கதையும் கலகலப்பான காட்சிகளும். முடிவை முன்பே யூகிக்கிறவர்களுக்கு ‘தா…’ன்னு கேட்கிறதுக்கு முன்னாடியே ஒரு மோதிரம் போடலாம்!

ஐந்து இளைஞர்கள். வெவ்வேறு அந்தஸ்தில் இருந்தாலும், இவர்களின் நட்பு ரொம்பவே கெட்டி. நண்பனின் தங்கையை வேறொருவன் ரூட் விட, பிரண்ட்ஷிப்புக்காகவும், அது காதல் என்பது புரியாமலும் காதலனை பொளந்து கட்டுகிறான் ஹீரோ. “உனக்கும் லவ் வந்திருந்தா தெரிஞ்சுருக்கும். பத்து பேரை அடிக்கிறவன் ஆம்பிளை இல்ல. ஒருத்தியோட மனசை ஜெயிக்கறவன்தான் ஆம்பிளை” என்று நண்பனின் தங்கை திட்டிவிட்டு போக, அனுபவத்திற்காக காதலிக்க துவங்குகிறான் ஹீரோ. அதிலும் ஃபெயில்! அப்புறம் வீட்டில் பார்க்கும் பெண்ணையை காதலிக்க ஆரம்பிக்கிறான். அவளோ நன்கு படித்த அழகி. இவனோ படிப்பும் இல்லாத பர்சனாலிடியும் இல்லாத லோக்கல். இந்த ஏற்ற தாழ்வை தன் அன்பால் சரி செய்யும் அவன், தாலி கட்டுகிற கடைசி நேரத்தில் சந்திக்கும் குழப்பங்கள்தான் முடிவு.

‘உயிர் ஊருக்கு. உடல் பாருக்கு’ என்ற மன்றப் பலகை வாசகத்தில் ஆரம்பித்து, அம்சவேணியின் அதிரடி டயலாக் வரைக்கும் நம்மை பதம் பார்க்கிறது காமெடி! (‘பார்’ன்னா உலகம்னு அர்த்தமாம்ல…) அதிலும் அப்போதுதான் வயிறு முட்ட சாப்பிட்டிருக்கும் சண்முகம், நண்பர்கள் குடிக்க அழைத்தவுடன் வயிறை காலி செய்வதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சியும், அம்சவேணியின் காதலுக்கு பின் அவருக்கு நேரும் பரிணாம வளர்ச்சியும் தியேட்டரையே அதிர வைக்கிறது. நகைச்சுவை நாயகர்களில் நம்பிக்கைக்குரிய புதிய வரவு இந்த சண்முகம்! அம்சவேணியின் டயலாக் மாடுலேஷன் டாப். “ஒவ்வொருத்தரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பொண்ணு இருப்பான்னு சொல்லுவாங்க” என்று மைல்டாக ஆரம்பித்து, “த்தூ…” காறித் துப்பி விட்டு செல்லும் காட்சிகளில் எல்லாம் பொங்கி வருகிறது சிரிப்பு.

ஆக்ஷன் ஹீரோவுக்கான அத்தனை முகவெட்டும் இருக்கிறது ஹரிக்கு. எவளாயிருந்தா என்ன? தேவை உடனடியாக ஒரு காதலி… என்கிற அவரது மௌன தத்துவம் பீறிட்டு தெறிக்கிறது பல காட்சிகளில். அதில் ஒன்றுதான் அந்த ‘கண்ணே கலைமானே’ பாடலை குத்துப்பாட்டாக்குகிற கொடுமை. கல்லூரி மாணவியான நிஷாவை இவருக்கு நிச்சயித்த பின் சக மாணவனிடமிருந்தும், தாய் மாமாவிடமிருந்தும் அவரை காப்பாற்ற ஹரி படுகிற பாடு செம கிறுகிறுப்பு. கடைசியில் கை விலங்குதான் என்று நினைத்தால் விக்ரமன் ஸ்டைலிலில் வேறு கதவை திறக்கிறார் டைரக்டர்.

கதாநாயகி நிஷாவை எங்கிருந்து பிடித்தார்களோ, ஒரு தலை ராகம் ரூபாவின் சோகம் வழிந்தோடுகிற முகம். கதைக்குள் நச் என்று பொருந்திவிடுகிறார். ஆஸ்பிடலில் தன்னை குறை சொல்லும் அம்மாவை “உதவி செய்வேன்னு கூட்டிட்டு வந்தேன். நீ கிளம்பு” என்று விரட்டும் ஹரியை மவுனமாகவே காதலிக்க ஆரம்பிக்கும் இவரது கேரக்டரும் ஈர்க்கிறது.நாற்பதை தாண்டியும் லவ்வுக்காக அலைவதும், தினம் ஒரு செருப்பை சந்தித்து மரத்து போவதுமாக சிவப்பு ரோஜா கோவிந்தன். அந்தகால கமல் மாதிரியான இவரது கெட்டப், பார்த்ததுமே பல்லிளிக்க வைக்கிறது.டைரக்டர் சூர்ய பிரபாகர், எடிட்டர் காசிவிஸ்வநாதன் இருவர் தவிர மற்ற எல்லோரும் இன்னும் உழைத்திருக்கலாம். ஸ்ரீவிஜெய் இசையில் ‘ஏதோ ஒரு ஏக்கமோ…’ மட்டும் திரும்ப முணுமுணுக்க வைக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி