பொருளாதாரம் அயர்லாந்து பெயில் அவுட் பாடம்

அயர்லாந்து பெயில் அவுட் பாடம்

அயர்லாந்து பெயில் அவுட் பாடம் post thumbnail image

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper,   Tamil daily newspaper,Tamilnadu   politics,kollywood,Tamil Cinema

தற்போது உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்படும் செய்தி அயர்லாந்து ‘பெயில் அவுட்’.

வெளிப்படையாக செய்தியை பார்ப்போர் எல்லாம் அனுமானிப்பது அயர்லாந்து அரசு பொறுப்பில்லாமல் வரவுக்கு மீறி செலவு செய்து நாட்டை படுபாதாளத்தில் தள்ளி இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியால் மீட்கபடுகிறது என்ற செய்தி.

ஆனால் உண்மையான செய்தி அதுவல்ல. தற்போது உண்மையில் பெயில் அவுட் நடப்பது அயர்லாந்துக்கு அல்ல. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய தனியார் வங்கிகளுக்கு தான்.

இதன் பயனை அனுபவிக்க போவது அயர்லாந்து மக்கள் அல்ல. ஐரோப்பிய தனியார் வங்கிகளும், இங்கிலாந்து மற்றும் யூரோ அரசாங்கமும் தான். ஆனால் இதனால் ஏற்பட போகும் இழப்புகள் விழ போவது அயர்லாந்து மக்களின் தலை மீது தான். ஆச்சரியமாக இருக்கிறதா? அது தான் உண்மை. இது ஐரோப்பிய வங்கிகளை காக்க நடக்கும் நூதன பெயில் அவுட்.

ஒவ்வொரு நாடும் தனது வரவுக்கு மீறி செலவு செய்யும்போது மிக பெரிய பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படுகிறது. பொதுவாக அரசுகள் போரில் ஈடுபடும் போது இந்த நிலை ஏற்படும். மக்கள் நலப் பணிகளை வரவுக்கு மீறி அதிக அளவு செய்தாலும் இது போல் பற்றாக்குறை ஏற்படும்.

பற்றாக்குறையின் அளவு நாட்டின் உற்பத்தியை விட மிக அதிகமாக சென்றால் அந்த நாட்டினால் கடனை திருப்பி தர முடியுமா?. ரிஸ்க் அதிகமாக இருப்பதை காரணம் காட்டி கடனுக்கான வட்டி வீதம் மிக அதிகமாகும். இதன் விளைவாக புதிய கடனை வாங்கும்போதும், பழைய கடனை புதுப்பிக்கும் போதும் நிதிப் பிரச்ச்னை ஏற்பட்டு அதிலிருந்து மீள பொருளாதார உதவியை (பெயில்-அவுட்) நாடுகள் கோரும்.

ஆனால் அயர்லாந்தின் உண்மை நிலை அதுவல்ல. கடந்த இரு ஆண்டுக்கு முன்பு வரை அந்நாட்டு அரசின் பட்ஜெட் பற்றாக்குறை விகிதம் அதன் மொத்த உற்பத்தியில் (GDP) 12 சதவீதமாகத் தான் இருந்தது. இது பிற ஐரோப்பிய நாடுகளை (ஜெர்மனி- 40%, பிரான்ஸ்- 60% ) விட மிகக் குறைவு.

அப்படியென்றால் அரசு மிகவும் பொறுப்பாக இருந்துள்ளது என்று தான் அர்த்தம்.

ஆனால், அயர்லாந்துக்கு வில்லன் ஐரோப்பிய வங்கிகள் மற்றும் அந்நாட்டு நிதி துறையில் இருந்த கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால் வந்தது. அமெரிக்க வங்கிகள் அமெரிக்க அரசு நடத்திய போர்களாளும், Sub Prime கடன்களாளும் மிகப் பெரிய லாபத்தை குறுகிய காலத்தில் காட்டத் தொடங்கிய போது,

ஐரோப்பிய வங்கிகளும் அவர்களோடு போட்டி போட்டு லாபம் காட்ட எதாவது செய்ய முயன்றன. ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு வங்கிகள் தங்கள் நாடுகளில் நிதித் துறையில் கட்டுபாடு அதிகம் இருந்ததால் அங்கு கண்டபடி கடன் கொடுத்து லாபம் காட்ட முடியவில்லை.

இந்த ஐரோப்பிய வங்கிகளோடு இங்கிலாந்து மற்றும் அமெரிக்க வங்கிகளும் புதிய சந்தை தேடி ஐரோப்பாவின் பிற நாடுகளில் வேட்டையை தொடங்கின. அப்போது ஐரோப்பாவில் அதிக அளவு செலவு செய்து கொண்டிருந்த நாடுகளின் பட்ஜெட் பற்றாகுறையை தீர்க்க கடன் கொடுத்தும்,

அங்கு வங்கித்துறை கட்டுபாடு குறைவாக இருந்த நாடுகளில் கடனை அள்ளி கொடுத்தும் தங்கள ‘பேலென்ஸ் ஷீட்டை’ பெருக்கி காட்டினர்.

அயர்லாந்து நாடு இதில் இரண்டாவது ரகம். வங்கிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த மீடியாக்கள் மூலம் அயர்லாந்தில் மிக பெரிய வளர்ச்சி தொடங்கிவிட்டதாகவும், இந்த வளர்ச்சி தொடரும் என்றும், நாட்டின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை வரலாறு காணாத வளர்ச்சி காணப் போவதாகவும் செய்திகளை பரப்பின.

அயர்லாந்தில் நிதித் துறையில் கட்டுபாடு சிறிதளவே இருந்ததால் கட்டுமானத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கு அளவில்லா கடன் வழங்கப்பட்டது. இந்த கடனுக்கான பணம் எல்லாம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வங்கிகள் மூலம் வந்தது.

ஜெர்மனி நாட்டின் பட்ஜெட் பற்றாகுறையை விட அந்நாட்டு வங்கிகள் அயர்லாந்துக்கு கொடுத்துள்ள கடன் தொகை அதிகம்!.

வழக்கம்போல் ஒரு வீக்கம் வந்தால் ஒரு வாட்டம் வரத்தானே வேண்டும். அந்த வாட்டம் வரத் தொடங்கிய போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடந்ததைப் போல அயர்லாந்திலும் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி அடைந்தது.

சந்தை பொருளாதாரக் கூற்றுப்படி பார்த்தால் தவறான கணிப்பின் மூலம் கடன் கொடுத்த ஐரோப்பிய வங்கிகள் தங்கள் முதலீட்டில் நஷ்டத்தை சந்திக்க வேண்டும். தாங்க முடியாத நட்டத்தை அடையும் அயர்லாந்து வங்கிகள் திவாலாக வேண்டும்.

ஆனால் தங்களது தவறான முடிவால் ஏற்பட்ட நஷ்டத்தை ஏற்று கொள்ள ஐரோப்பிய வங்கிகள் தயாரக இல்லை. அயர்லாந்து நாட்டுக்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச நிதியம் (IMF) மூலம் கடும் நெருக்கடி தரப்பட்டது.

அரசு வேறு வழியின்றி திவாலை சந்திக்க, பல வங்கிகளை அரசுடமையாக்கியது. அதாவது வங்கிகள் சுமக்க வேண்டிய சிலுவையை அரசு சுமக்கத் தொடங்கியது. இதுவே அமெரிக்காவாக இருந்தால் பணத்தை வேண்டிய அளவு பிரிண்ட் செய்து Quantitative Easing என்று கூறி நிலைமையை சமாளித்திருப்பார்கள்.

அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாவிட்டலாவது நாணய மதிப்பை குறைத்தல் அல்லது வேறு எதாவது யுக்தியை பின் பற்றி இருக்கலாம். பாவம் அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது.

வங்கிகளின் கடன் அரசின் தலையில் விழுந்ததால் அதன் கடன் சுமை அதிகமாகியது. அதன் கடனை திருப்பி செலுத்துமா என்ற நம்பகத்தன்மையும் குறைய ஆரம்பித்தது.

அது மட்டுமல்ல, சந்தையில் அனுமானிப்பவர்கள் (Speculators) வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச ஆரம்பித்துவிட்டனர். உலகச் சந்தையிலும் அயர்லாந்து கடன் பெற 8 சதவீதத்துக்கும் அதிகமாக வட்டி செலுத்த வேண்டிய கட்டயத்திற்கு தள்ளப்பட்டது.

தனது அதிகமான கடனை 8% மேல் வட்டி கொடுத்து வாங்கினால், அந்நாடு மீண்டும் மீள முடியாத கடன் வலையில் வீழ வாய்ப்புள்ளது.

அயர்லாந்து அரசு வட்டிக்கு கடன் வாங்க ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச நிதியத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. சர்வதேச நிதியத்திடம் சென்றால் தான் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமே!. அது ஐரோப்பிய தனியார் வங்கிகளுக்கு விழுந்திருக்க வேண்டிய பாரத்தை அயர்லாந்து மக்களிடம் இறக்கி வைக்க சொல்லி விட்டது.

இந்த பிரச்ச்னைக்கு முன், நியாயமான பட்ஜெட் போட்டு, அளவோடு மக்கள் நலனுக்காக செலவு செய்த அரசை, மக்கள் நலனுக்கு எதிரான முடிவுகளை எடுக்க சொல்லி, நெருக்கடி கொடுத்து வெற்றியும் பெற்று விட்டனர்.

அரசு எடுத்துள்ள ஒரு சில முடிவுளை நீங்கள் பார்த்தால் என்ன நடக்கிறது என்று நீங்களே யூகித்து கொள்வீர்கள்.

1.குறைந்தபட்ச தொழிலாளர் ஊதியம் 10 சதத்துக்கும் மேலாக குறைக்கபட்டுள்ளது.

2. ஏற்கனவே வீட்டுக் கடனை கட்ட முடியாதவர்கள் இருக்கையில் 530மில்லியன் யூரோவுக்கான புதிய வீட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது.

3. மக்கள் நலவாழ்வுக்கான பட்ஜெட் 3 பில்லியனுக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது.

4. வருமான வரி உயர்த்தப்பட்டுள்ளது.

5. பொதுத் துறை தொழிலாளர்கள் ஆட் குறைப்பு மற்றும் சம்பள குறைப்பில் ஈடுபட்டுள்ளன.

இது போன்ற முடிவுகளை எடுத்துள்ளதால் அயர்லாந்து அரசுக்கு குறைந்த வட்டியில் ஐரோப்பிய மத்திய வங்கியிலிருந்தும் இங்கிலாந்திடமிருந்தும் சர்வதேச நிதியத்திடமிருந்து கொஞ்சம் கடன் கிடைக்கும்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்தக் கடன் அயர்லாந்து மக்களின் நன்மைக்காக செலவிடப் போவது இல்லை. இந்தக கடன் ஐரோப்பிய வங்கிகளின் கடனை வட்டியோடு திருப்பி செலுத்த தான் உதவும்.

அதாவது ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் இங்கிலாந்து மத்திய வங்கியிடம் கடன் வாங்கி ஐரோப்பிய மற்றும் இங்கிலாந்து தனியார் வங்கிகளுக்கு அயர்லாந்து தரவுள்ளது.

இரண்டு கடனுக்கான வட்டியையும் முதலையும் அயர்லாந்து மக்களின் உழைப்ப்பின் மூலம் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

சரியாகச் சொன்னால், இது கிட்டத்தட்ட நம் ஊர் கந்துவட்டிக் கதை தான்.

இங்கிலாந்தில் பலர் அயர்லாந்துக்கு ‘பெயில் அவுட்’ பணம் கொடுப்பதை எதிர்க்கிறார்கள். இங்கிலாந்து மத்திய வங்கி அயர்லாந்துக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் இங்கிலாந்தின் பல தனியார் வங்கிகளின் கதியும் அதோ கதி தான்!.

உண்மையில் என்ன நடக்கிறது என்றால் இதன் மூலம் இங்கிலாந்து நாட்டிற்கு தான் மிக பெரிய லாபம். அயர்லாந்து நாடு வெளி சந்தையிலிருந்து கடன் வாங்க வேண்டும் என்றால் 8% வட்டி கொடுக்க வெண்டும். ஆனால் இங்கிலாந்து 3.3% வட்டிக்கு பணம் வாங்க முடியும் (Quantitative easing முறையிலும் பணத்தை 0% வட்டியிலும் உற்பத்தி செய்யலாம்).

எனவே இங்கிலாந்து அரசு 3.3% க்கு கடன் வாங்கி 5%க்கு அயர்லாந்துக்கு கொடுக்க போகிறது. ஆக மொத்தம் அனைத்து வகையிலும் இங்கிலாந்துக்கே லாபம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி