அரசியல்,முதன்மை செய்திகள் ஸ்பெக்ட்ரம் ஊழல் இன்று நேற்றல்ல தயாநிதி காலத்து பழசு….

ஸ்பெக்ட்ரம் ஊழல் இன்று நேற்றல்ல தயாநிதி காலத்து பழசு….

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாளுக்கு நாள் ஒரு பூதம் வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கிறது. ராஜாவுக்கு முன்பு தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் விலை தொடர்பாக பிரதமருடன் மோதி, அவருக்கே உத்தரவிட்டதாக ஐபிஎன் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன். அப்போது பிரதமருக்கு தயாநிதி மாறன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஸ்பெக்ட்ரம் விலை குறித்து அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பக் கூடாது என்று கண்டிப்பு கலந்த தொணியில் அவர் பிரதமருக்கு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பிரதமரின் முடிவுக்கும் அவர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐபிஎன் செய்தி கூறுவதாவது…

பிரணாப் முகர்ஜியைத் தலைவராகக் கொண்ட அமைச்சர்கள் குழு 2006ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் குறித்து ஆராய இந்தக் குழு அமைக்கப்பட்டது. அப்போது பிப்ரவரி மாதம் 28ம் தேதி தயாநிதி மாறன் பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணய விவகாரத்தில் பிரதமர் தலையிடக் கூடாது என்று கூறியிருந்தார் தயாநிதி மாறன்.

மேலும், இதுதொடர்பாக விதிக்கப்பட்ட சில விதிமுறைகளையும் அவர் ஆட்சேபித்துள்ளார்.

இதுகுறித்து தயாநிதி மாறன் தனது கடிதத்தில், அமைச்சர்கள் குழுவின் பரிந்துரை நிபந்தனைகள், எங்களது விருப்பத்திற்கு உட்பட்டே இருக்கும் என்று தாங்கள் உறுதியளித்திருந்தீர்கள். மேலும் காலியாக உள்ள ஸ்பெக்ட்ரம் குறித்து மட்டுமே அமைச்சர்கள் குழு ஆராய வேண்டும் என்றும் நாங்கள் விருப்பம் தெரிவித்திருந்தோம். இருப்பினும் தொலைத் தொடர்புத்துறையின் பணியில் தலையிடுவது போல அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகள் உள்ளன.

எனவே நாங்கள் யோசனை தெரிவித்திருந்தது போல, அமைச்சர்கள் குழுவின் விதிமுறைகளை மாற்றியமைக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தாங்கள் அறிவுறுத்தினால் நலமாக இருக்கும் என்று கூறியுள்ளார் தயாநிதி மாறன்.

இதைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி அப்போதைய அமைச்சரவைச் செயலாளர் பி.கே.சதுர்வேதி, புதிய விதிமுறைகளை பிறப்பித்து ஒரு கடிதத்தை எழுதினார். அந்தக் கடிதம், பிரமதரின் ஒப்புதலோடு எழுதப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அதாவது தயாநிதி மாறனின் பரிந்துரைகள் மற்றும் உத்தரவை பிரதமர் ஏற்றதாக அர்த்தமாகிறது.

2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம், அப்போதைய தொலைத் தொடர்புத்துறை செயலாளர் டி.எஸ்.மாத்தூர், இதுகுறித்து நிதியமைச்சகத்திடம் விளக்கம் தெரிவித்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

இருப்பினும் 2007ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி அப்போதைய நிதித்துறை செயலாளர் அசோக் ஜா அமைச்சரவைச் செயலாளர் சதுர்வேதிக்கு, தொலைத் தொடர்புத்துறையை குற்றம் சாட்டி கடிதம் எழுதுகிறார். அதில், ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தையும் அமைச்சர்கள் குழு பரிசீலனையில் சேர்க்குமாறு அவர் அறிவுறுத்துகிறார்.

அதில், ஸ்பெக்ட்ரம் விலை மற்றும் ஒதுக்கீடு விவகாரம் நாட்டின் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது. எனவே அதுகுறித்து அமைச்சர்கள் குழு விவாதிக்க வேண்டியது அவசியமாகும். இது தொலைத் தொடர்புத்துறை சம்பந்தப்பட்டது என்று கூற முடியாது. எனவே இதுகுறித்தும் அமைச்சர்கள் குழு விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் அவர். ஆனால் அந்தக் கடிதத்திற்கு நிதித்துறை செயலாளர் பதிலே தரவில்லை.

இதுகுறித்து திமுக வட்டாரத்தில் ஐபிஎன் விசாரிக்கையில், அப்போது, பாதுகாப்புத்துறை வசம் இருந்த ஸ்பெக்ட்ரத்தில் எவ்வளவை அது திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பது மட்டுமே பிரச்சினையாக இருந்தது. இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்க மட்டுமே அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.

இதுதொடர்பாக பிரதமருக்கும், தொலைத் தொடர்பு அமைச்சருக்கும் இடையே பல கடிதப் போக்குவரத்துகள் நடந்துள்ளன. மேலும் அந்தப் பிரச்சினை அப்போதே தீர்க்கப்பட்டு விட்டது.

அனைத்தும் வெளிப்படையாகவும், ஒளிவுமறைவில்லாமலும்தான் செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏல அடிப்படையில் நடத்த பிரதமர் முயன்றுள்ளார். ஆனால் அதை ராஜா நிராகரித்து விட்டு, முதலில் வருவோருக்கே ஒதுக்கீடு என்ற முறையை கடைப்பிடித்துள்ளார்.

தற்போதைய கடிதத் தகவல் மூலம் ராஜாவுக்கு முன்பே, ஸ்பெக்ட்ரம் தொடர்பாக பிரதமரை திமுக கையைக் கட்டிப் போட்டு விட்டது தெரிய வந்துள்ளது என்று அந்த செய்தி கூறுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி