அரசியல் சிங்களவன் வால் பிடித்தால் தான் கதை நடக்கும்.

சிங்களவன் வால் பிடித்தால் தான் கதை நடக்கும்.

basil_naml

வடக்கு மாகாணத்தின் முடிசூடா மன்னனாக திகழ வேண்டும் என்கிற பேராசை காரணமாக ஜனாதிபதியின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஸ எம்.பிக்கும், ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ எம்.பிக்கும் இடையில் பனிப்போர் ஒன்று இடம்பெற்று வருகின்றது என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளார்கள்.

இதனால் ராஜபக்ஸ  கம்பனிக்குள் இரு அணிகள் தோன்றி உள்ளன என்றும் நம்பப்படுகின்றது.  குறிப்பாக நாமல் ராஜபக்ஸவின் பக்கம் சபாநாயகரும், ஜனாதிபதியின் மூத்த சகோதரருமான சமல் ராஜபக்ஸ சாய்ந்து உள்ளார் என்றும் பசில் ராஜபக்ஸவின் பக்கம் பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதியின் இளைய சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஸ சாய்ந்து உள்ளார் என்றும் இச்செய்திகள் தெரிவிக்கின்றன.

வட மாகாணத்தின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருப்பவர் பசில் ராக்பக்ஸ ஆவார்.

அவர் இத்தலைவர் பதவியையும், அமைச்சர் பதவியையும் வைத்துக் கொண்டு வட மாகாணத்தில் சொந்த செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள பகீரத முயற்சிகளை எடுத்து வருகின்றார். அத்துடன் அவரை மிஞ்சி வேறு எவரும் வடக்கில் செல்வாக்கு மிக்கவர்களாக உருவாகி விடக் கூடாது என்பதில் மிகுந்த அவதானமாகவும் இருக்கின்றார்.

ஆனால் பசில் ராஜபக்ஸ எம்.பியின் பேராசையில் மண்ணைத் தூவி வருகின்றார் நாமல் ராஜபக்ஸ எம்.பி. இவர் ஜனாதிபதியின் ஆசியுடன் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் ஊடாக வடக்கில் கொஞ்சம் கொஞ்சமாக காலூன்ற முயற்சிக்கின்றார்.

யுத்தத்தால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டு இருக்கும்  வட மாகாண இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் மூலம் மனிதாபிமான, நிவாரண உதவிகளை முன்னெடுத்து வருகின்றார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  வவுனியாவிலும், கிளிநொச்சியிலும் அண்மையில் வழங்கப்பட இருந்தது.

ஆனால் செஞ்சிலுவைச் சங்கக் குழுவினரிடம் இருந்து டிரக்டர்களை நாமல் ராஜபக்ஸ குழுவினர் பலாத்காரமாக பிடுங்கிக் கொண்டனர். நாமல் ராஜபக்ஸ சுய விருப்பத்தின் பேரில் இவற்றை விநியோகித்து புகைப்படங்களும் பிடித்துக் கொண்டார்.

பசில் ராஜபக்ஸ வடக்கில் அவரின் செல்வாக்கை அதிகரிக்கின்றமைக்கான கருவியாக  யாழ்ப்பாணத்தின்  பிரபல தொழில் அதிபர்களில் ஒருவரான சதாசிவம் இராமநாதனின் புதல்வர் அங்கயன் இராமநாதனை பயன்படுத்தி வருகின்றார். அங்கயன் இராமநாதன் பசிலின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரம் ஆனவர்.

பசில் ராஜபக்ஸவின் சிபாரிசின் பேரிலேயே அங்கயன் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டார். ஆயினும் தோல்வி கண்டார். இருப்பினும் பின்னர்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்டத்துக்கான பிரதான அமைப்பாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.

இவர் எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பசிலின் ஆதரவுடன் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நாமல் ராஜபக்ஸ எம்.பி மாத்திரம் சளைத்தவரா? அவர் வடக்கில் சொந்த செல்வாக்கை அதிகரிக்கின்றமைக்காக ‘மின்னல்’ ஜே.ஸ்ரீரங்கா எம்.பியை கருவியாக பயன்படுத்தி வருகின்றார். வடக்குக்கு விஜயம் செய்யும்போதெல்லாம் ஸ்ரீரங்கா எம்.பியையும் கூடவே அழைத்துச் செல்கின்றார்.

மீள்குடியேற்றப்பட்டிருக்கும் வட மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு நாமல் ராஜபக்ஸ எம்.பியின் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் மூலம் உரிய தீர்வு பெற்றுத் தரப்படும் என்று ஸ்ரீரங்கா எம்.பி பிரசாரம் செய்து வருகின்றார்.

எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின்போது ஸ்ரீரங்கா எம்.பிக்கு வட மாகாண அபிவிருத்திப் பணிகளோடு சம்பந்தப்பட்ட பிரதி அமைச்சர் பதவி ஒன்றை வழங்க தந்தைக்கு நாமல் ராஜபக்ஸ எம்.பி சிபாரிசு செய்துள்ளார் என்றும் தெரிய வருகிறது.

ஸ்ரீரங்கா எம்.பி அவ்வாறு பிரதி அமைச்சர் ஆகி விட்டால் பசில்-நாமல் பனிப்போர் இன்னும் உக்கிரம் அடைந்து விடும் என்பதும் வெளிப்படை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி