அரசியல்,முதன்மை செய்திகள் கர்நாடகத்தின் நடவடிக்கையால் இந்திய ஒருமைப்பாடு சிதறும்

கர்நாடகத்தின் நடவடிக்கையால் இந்திய ஒருமைப்பாடு சிதறும்

nedumaran

கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில், தமிழகத்துக்கு எதிரான நிலை எடுத்திருப்பதை முதல்வர் கருணாநிதி கண்டிக்கத் தயங்குவது ஏன்? கர்நாடக அடாவடித்தனத்தின் விளைவாக இந்திய ஒருமைப்பாடு உடைந்து சிதறும் அபாயம் உருவாகும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் காவிரி சமவெளிப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் வாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி முதல்வர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளை கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் ஏற்க மறுத்துள்ளது.

ஆளும் கட்சியான பாஜக, எதிர்க் கட்சிகளான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட மறுத்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

காவிரியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் இரு மாநிலங்களும் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது குறித்து நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பிலும், இறுதித் தீர்ப்பிலும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தன்னுடைய தேவைக்குப்போக எஞ்சிய நீரைத்தான் தமிழகத்துக்கு வழங்க முடியும் என்று கர்நாடகம் கூறியுள்ளது. இதனால், தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். அரிசி உற்பத்தியும் பெருமளவு பாதிக்கப்படும். தமிழக முதல்வர் உடனடியாக பிரதமரை சந்தித்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி, தமிழகத்துக்கு எதிரான நிலை எடுத்திருப்பதை முதல்வர் கருணாநிதி கண்டிக்கத் தயங்குவது ஏன்? கர்நாடக அடாவடித்தனத்தின் விளைவாக இந்திய ஒருமைப்பாடு உடைந்து சிதறும் அபாயம் உருவாகும் என்று அவர் கூறியுள்ளார்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி