அரசியல் அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோருவதற்காக கடல் வழியாகப் பயணம் செய்த 85 தமிழர்களின் திகிலூட்டும் பயண அனுபவங்கள்

அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோருவதற்காக கடல் வழியாகப் பயணம் செய்த 85 தமிழர்களின் திகிலூட்டும் பயண அனுபவங்கள்

Srilankan Tamil refugees dangerous sea travel details

அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோருவதற்காக கடல் வழியாகப் பயணம் செய்த 85 இலங்கையர்கள் தமது பயங்கரமான பயணம் தொடர்பாக விபரிக்கின்றனர்.
இந்தப் பயணத்தில் அவர்களது படகு உடைந்தது, நீர்,உணவு மற்றும் எரிபொருள் தீர்ந்துவிட்டது. மூன்றுபேர் இறந்தனர். இவ்வாறு The Daily Telegraph என்னும் அவுஸ்ரேலிய ஊடகம் தனது செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளது.
படகின் ஜிபிஎஸ் தொகுதி பழுதடைந்து எரிபொருள் தீர்ந்து,இயந்திரமும் பழுதடைந்தபோது தாம் கிறிஸ்மஸ் தீவை நெருங்கியிருந்ததாக அந்தக் குழுவின் அனைத்து தமிழ் மக்களும் நம்பினர்.
பின்னர் உணவு தீhந்துவிட்ட நிலையில் தாம் பிடித்த மீனை உணவாகவும் படகில் விழும் மழை நீரைக் குடிப்பதற்கும் பயன்படுத்தி பயங்கரமான 30 நாட்கள் கடலில் இலக்கின்றி மிதந்து தத்தளித்துக்கொண்டிருந்தனர்

அவர்கள் மீட்கப்பட்ட கிறகற்றவ் எரிமலைக்கு அண்மையிலுள்ள பனிற்றன் தீவில் தரையைத் தட்டுவதற்கு முன்னர் தாம் இந்தோனேசியக் கடல் எல்லைக்குள் வந்துவிட்டதாக அவர்கள் நம்புகின்றனர்.
தமது படகிலிருந்து அருகிலிருந்த மீன்பிடிப்படகை உதவிக்கு அழைப்பதற்காக நீந்திச் செல்ல முற்பட்டவேளையில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். படகு தரையைத் தட்டியபோது பாறையுடன் மோதுண்டு இன்னொரு யுவதி உயிரிழந்தார்.
2 வயது முதல் 14 வயது வரையான சிறுவர்கள் அடங்கிய இந்தக் குழுவானது இந்தோனேசிய கடல் காவல்துறையினரால் காப்பாற்றப்பட்டனர்.
மெராக் துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஜகார்த்தாவிலுள்ள தடுப்பு முகாமிற்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் நியூஸ் லிமிட்டட் இந்தக் குழுவினரை செவ்விகாண கடல் காவல்துறையின் படகில் செல்ல அனுமதிக்கப்பட்டது.
வாடிய தோற்றம், சில சிறுவர்கள் அழுதுகொண்டு தமது நோய்கள்பற்றி முறையிட்டனர், ஏனையவர்களிடம் காலணிகளோ எந்த உடமைகளோ இருவிக்கவில்லை.
தனது நாட்டில் குண்டுத் தாக்குதலால் கையில் ஏற்பட்டிருந்த பயங்கரமான வடுவைக் காட்டிய பெண் ஒருவர், இதனாலே தான் தனது கணவனுடனும் இரு பிள்ளைகளுடனும் அந்த நாட்டைவிட்டு வெளியேறியதாகத் தெரிவித்தார்.
தனது தாயாரும் தானும் படகில் வந்ததாகவும் தனது தந்தை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாகவும் சிறுவன் ஒருவன் கூறினான். செயற்கைக் காலுடன் இருந்த இன்னொருவரும் தானும் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
தாம் ஏற்கனவே இதுபற்றி ஜகார்த்தாவிலுள்ள அவுஸ்ரேலிய பெடரல் பொலிசுக்குத் தெரிவித்திருப்பதாகவும் இவர்கள் ஜகார்த்தாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் அவுஸ்ரேலிய பெடரல் பொலிஸ் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் பன்ரன் கடல் காவல்துறையின் தலைமை அதிகாரி புடி கேர்மன் தெரிவித்தார்.
தமது காவல்துறையினர் இந்தக் குழுவைக் கண்டபோது அவர்கள் மிகவும் பலவீனமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
15 பெண்களையும் 18 சிறுவர்களையும் உள்ளடக்கிய இந்தக் குழு இந்தோனேசி குடிவரவுத் திணைக்களத்தின் தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று அவர்கள் கரையேறிய தீவிலிருந்து கடுமையான காலநிலை காரணமாக அவர்களை அழைத்துச் செல்ல முடியவில்லை.
கடந்த வாரத்தில் இந்தோனேசிய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டாவது சிறிலங்காவிலிருந்து புகலிடம் கோருபவர்களின் படகு இதுவாகும். ஆப்கான்கள், ஈராக்கியர்கள் மற்றும் ஈரானியர்களைக் கொண்ட இன்னொரு படகு யோக்யகார்த்தாவில் வைத்து வார இறுதியில் தடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவானது சிறிலங்காவிலிருந்து ஓகஸ்ட் 31 இல் புறப்பட்டிருப்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக கடல் காவல்துறை தலைமை அதிகாரி புடி கேர்மன் தெரிவித்தார்.
சிறிலங்காவிலிருந்து ஆட்களைக் கடத்துபவர்களுக்கு அவர்கள் 200 அமெரிக்க டொலர்கள் கொடுத்திருப்பதாக நம்பப்படுகிறது. சிறுவர்களுக்குப் பணம் அறவிடப்படவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை.
ஆனால் தாம் எவ்வளவு பணம் செலுத்தினார்கள் அல்லது எப்படி இதனை ஒழுங்குபடுத்தினார்கள் என்பது தொடர்பில் நியூஸ் லிமிட்டட்டுடன் கதைத்த எவரும் உறுதியாகக் கூறவில்லை. அவர்களின் கருத்துப்படி, இந்தப் படகு மன்னாரிலிருந்து புறப்பட்டிருப்பதுடன் அவர்களில் படகுபற்றித் தெரிந்தவர்களே ஓட்டுநர்களாக இருந்துள்ளனர்.
சிறிலங்காவிலிருந்து கிறிஸ்மஸ் தீவுக்குச் செல்வதற்கு 15 நாட்கள் தேவை என தமக்குக் கூறப்பட்டிருந்ததாகவும் 15 நாட்கள் எல்லாம் சுமூகமாகவே சென்றதாகவும் படகை ஓட்டிய 29 வயதுடைய ராஜவர்ணம் தெரிவித்தார்.
ஜிபிஎஸ் பழுதடைந்து, இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இறுதியாக எரிபொருள் முடிவடைந்தபோது, தாம் கிறிஸ்மஸ் தீவுக்கும் அவுஸ்ரேலிய மண்ணுக்கும் அண்மையில் இருந்ததாக அவர் நம்புகிறார். பின்னர் படகானது காற்றின் கருணையில் இலக்கின்றி மிதந்தது.
இறுதியாக உணவும் நீரும் முடிவடைந்த நிலையில் அனைவருக்கும் வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டு அவதியுற்றனர்.
மழை பெய்தபோது மட்டுமே அவர்களுக்கு நீர் கிடைத்தது. அதுவும் ஒவ்வொரு நாளும் கிடைக்கவில்லை.
“கிறிஸ்மஸ் தீவை நாம் தவறவிட்டு இரண்டாவது நாள் எரிபொருள் முடிவடைந்துவிட, வெறுமனே கடலில் மிதந்துகொண்டிருந்தோம்”, என்றார் ராஜவர்ணம்.
“அடுத்த 30 நாட்கள் நாம் உயிருடன் இருப்போமா என்பது எமக்குத் தெரியாதிருந்தது. மிகவும் மோசமானது நாம் வாழ்வோமா அல்லது சாவோமா என்ற பயமே”.
இறுதியாக பனிற்றன் தீவை அடைந்தபோது அவர்கள் அந்தத் தீவில் கிடைத்த நத்தை, தேங்காய், பழங்கள் மற்றும் தானியங்களை உட்கொண்டனர். இறுதியாக காட்டில் வேலை செய்பவர்கள் அவர்களைக் கண்டு பொலிசுக்குத் தகவல் கொடுத்தனர்.
இன்னும் 15 பேர் அந்தத் தீவில் இருப்பதாகவும் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இராணுவத்தின் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்காகவே தாம் நாட்டைவிட்டு வெளியேறியதாகவும் அவர்கள் அவ்வாறு வெளியேறாவிட்டால் தமக்கோ, தமது பிள்ளைகளுக்கோ எதிர்காலம் இல்லை என்றே தாம் அஞ்சுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
குண்டுவீச்சினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தனது கையை சிறிதேவி எமக்குக் காட்டினார். அவர் தனது கணவன்,மகள் மற்றும் மகனுடன் படகில் வந்திருந்தார். தமக்குத் தற்போது என்ன நடக்கும் என்று தெரியாதபோதும் தாம் ‘ஒருபோதும் திரும்பி’ சிறிலங்காவுக்குப் போகப்போவதில்லை என அவர் தெரிவித்தார்.
தமக்கான எதிர்காலம அவுஸ்ரேலியாவிலேயே கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
“நாம் சிறிலங்காவில் நன்றாக வாழ முடியாது. நான் எனது அம்மாவுடனும் அப்பாவுடனும் சந்தோசமாக, அமைதியாக வாழ்ந்து கல்வி கற்க விரும்புகிறேன். நாம் அவுஸ்ரேலியாவுக்குப் போக விரும்புகிறோம். சிறிலங்காவில் அவர்கள் எங்கள்மீது குண்டுகளைப் போடுகிறார்கள். எனது வாழ்க்கை அவுஸ்ரேலியாவிலேயே இருக்கவேண்டும்”, என அழகான ஆங்கிலத்தில் ராதாகீதன் எனும் சிறுவன் கூறினான்.
எதிர்காலத்திற்காகவும் வாழ்விற்காகவுமே தான் தனது மகனின் வாழ்க்கையை ஆபத்திலும் அழைத்துவந்ததாக அவனது தாயார் கீதா தெரிவித்தார்.
அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல விரும்புவதற்கான காரணத்தைக் கேட்டபோது, எனது வாழ்க்கைக்காகவும் எனது பிள்ளையின் வாழ்க்கைக்காகவும் அங்கு செல்லவிரும்புவதாக அவர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி