அரசியல்,முதன்மை செய்திகள் எங்கும் அதிமுக தொண்டர்கள்… திக்குமுக்காடும் மதுரை…

எங்கும் அதிமுக தொண்டர்கள்… திக்குமுக்காடும் மதுரை…

madurai0001

மதுரையில் இன்னொரு சித்திரைத் திருவிழாவோ என்று கேட்கும் அளவுக்கு அதிமுக தொண்டர்களால் நிரம்பி வழிகிறது மதுரை மாநகரம்.

இதுவரை அதிகமுகவுக்கு கூடாத அளவுக்கு பெருந்திரளான கூட்டம் கூடியிருப்பதை கட்சிகளையும் தாண்டி அனைவருமே ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். கோவை மற்றும் திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூடியதை விட, பெருமளவிலான தொண்டர்கள் மதுரை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள் என்று உளவுத் துறை மேலிடத்துக்கு தகவல் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

மதுரையில் பெரும்பாலும் அழகிரி மற்றும் கருணாநிதியின் படங்கள், பேனர்கள்தான் பெரும்பாலும் நிறைந்திருக்கும். சாதாரண நாட்களிலேயே 100 மீட்டர் தூரத்துக்கு ஒரு கட் அவுட் வீதம் அழகிரிக்காக வைத்திருப்பார்கள்.

ஆனால் இப்போது அழகிரி – கருணாநிதி – திமுக படங்களோ, போஸ்டர்களோ, பேனர்களோ வெகு அரிதாகவே தென்படுகின்றன. எங்கு பார்த்தாலும் ஜெயலலிதாவின் பிரமாண்ட கட் அவுட்கள், பேனர்கள்தான்.

அழகிரி மற்றும் திமுகவின் செல்வாக்கை மீறி, மதுரையில் பிரமாண்ட கூட்டத்தைக் கூட்டிக் காட்டுவேன் என்ற தனது சபதத்தில் ஜெயலலிதா ஜெயித்துவிட்டார் என்றே கூறவேண்டும். அப்படி ஒரு கூட்டம்!

பாண்டி கோயில் அருகே உள்ள மஸ்தான்பட்டியில் மிக பிரமாண்டமாய் மேடையமைத்துள்ளனர். இங்குதான் சேதுசமுத்திரத் திட்டத்துக்கு முதல்வர் கருணாநிதி தலைமையில் சோனியா காந்தி அடிக்கல் நாட்டினார். இப்போது சேது சமுத்திரத் திட்டத்தை அடியோடு எதிர்க்கும் ஜெயலலிதா, திமுக ஆட்சியை அகற்றுவதாக சபதம் ஏற்று அதே இடத்தில் மேடை அமைத்துள்ளார்.

விரகனூர் ரிங் ரோட்டின் மேற்கு பகுதியில் வடக்கு நோக்கி மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையை சுற்றிலும் வி.ஐ.பி.,க்கள், முன்னணி கட்சியினர், பத்திரிகையாளர்கள் அமர்வதற்கு வசதியாக தனித் தனி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

‘மிரட்டுகிறார்கள் திமுகவினர்’

இதற்கிடையே ஆர்ப்பாட்டத்துக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்த இடம் தந்தவர்களை திமுகவினர் மிரட்டுவதாக அதிமுக நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிமுக கரை வேட்டி கட்டிக் கொண்டு சில திமுகவினர் கலவரத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருப்பதாகவும் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதனால் சந்தேகத்துக்கிடமாக நிற்கும் அனைவரையுமே அள்ளிக் கொண்டு போகின்றனர் போலீசார்.

ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட வரவேற்பு

இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை வரும் ஜெயலலிதாவுக்கு மிகப் பிரமாண்ட வரவேற்பளிக்க அதிமுகவினர் தயாராக உள்ளனர்.

விமான நிலையம் தொடங்கி, வளையங்குளம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஜெயலலிதாவுக்கு யானைகள் மற்றும் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

3 மணிக்கு ஆர்ப்பாட்டம் துவங்குகிறது…

ஆர்ப்பாட்டம் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையில் நடக்கும் என்றும், 6 மணிக்கு மேடை ஏறும் ஜெயலலிதா 7.30 மணி வரை பேசுவார் என்றும் அதிமுகவினர் தெரிவித்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் முழுமையாக சோதனையிடப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி