அரசியல் புலிகளும் பிரபாகரனும் – அழிவிற்கான விமர்சன வழி

புலிகளும் பிரபாகரனும் – அழிவிற்கான விமர்சன வழி

prabhakaran

முப்பதாண்டுத் தமிழ்த் தேசியவிடுதலைப் போராட்டம் பலி கொண்டவர்களின் எண்ணிக்கை இன்னமும் சரியாகக் கணிப்பிடப்படவில்லை. அது ஏதாவது ஒரு வழியில் இன்னமும் தொடர்கிறது. மக்களின் அவலங்கள் ஒரு புறத்தில் தொடர்கதையாக மறுபுறத்தில் ராஜபக்ச அரசு தனது சர்வாதிகாரத்தைத் தமிழ்ப் பேசும் மக்களின் மரண ஓலத்தின் மேல் இறுகக் கட்டமைத்துக் கொள்கிறது.
பசியால் தமிழ்ப் பேசும் மக்கள் செத்துப் போகின்ற நிலைமையை அவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். சமூகத்தின் ஒவ்வொரு பகுதியையும் பேரினவாதம் திட்டமிட்டு சிறுகச் சிறுகச் சிதைத்துக்கொண்டிருக்கிறது.
பேரின வாத அரசு தனது மேல் நிலையை பேணிக்கொள்ள, அதன் ஒவ்வொரு அங்கங்களும் மேலும் வலுவாக ஒழுங்கமைத்துக்கொள்கிறது.. இலங்கை அரசு முன்னைய புலிகளின் பகுதிகளைக்கூட தனது அடக்கு முறையின் அங்கங்களாக மாற்றியிருக்கிறது. கல்வி, கலாச்சாரக நிறுவனங்கள், தொழிற்துறை, பொருளாதாரம், அரசியல் என்ற அனைத்து அங்கங்களும் பேரினவாதச் சிந்தனையின் செயற்படு கருவிகளாக மாறியுள்ளன.
சிறுகச் சிறுக வளர்ந்த பேரினவாதம் வரலாற்றில் எப்போதும்ம் இல்லாதவாறு மிக ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனமாகிவருகிறது.
இறந்து போன வரலாற்றின் பக்கங்களை புரட்டிப்பார்க்க முற்படுகின்ற நாம் கற்றுக்கொள்வது குறித்துப் பேசுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பிரபாகரனும் கோடிட்டுக் காட்டப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது.
புலிகள் குறித்த முதலாவது விமர்சன வகையானது அவர்கள் மீதான உணர்ச்சிவயப்பட்ட அவர்கள் பாணியிலான தாக்குதலாக அமைகிறது. பிரபாகரனை சூரியத் தேவன், கடவுள் என்று கட்டமைக்கின்ற அதீத விம்பங்களின் எதிர் வினையாக அவரை அரக்கன், சாத்தான் போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் போன்று புனைய முனையும் ஒரு பகுதியினர் இவ்வாறு எதிர்வினையாற்றுகின்றனர்.
பொதுவாக போராட்டங்களின் மீதான வெறுப்புணர்வை உருவாக்க முனையும் அரச ஆதரவாளர்கள் ஒரு புறத்திலும் தமது சொந்த நோக்கங்களை முன்னிலைப்படுத்தும் சீரழிவு வாதிகள் மறுபுறத்திலுமாக உணர்ச்சிவயப்பட்ட அரசியலற்ற அவதூறு வடிவிலான பரப்புரைகள் அபாயகரமானவை.
எதிர்விளைவுகள் குறித்தோ மக்கள் நலன் குறித்தோ சிந்திக்காத குறுகிய அரசியல் நோக்கமுடைய இவர்களின் கருத்தாடல்களின் சமூகத்தின் மீதான பாதிப்பு எதிர்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
தேசிய இன ஒடுக்கு முறை பிரதான முரண்பாடாக வளர்ச்சியடைந்த சூழலில் அதற்கான போராட்டத்தில் 80 களின் இறுதிப்பகுதியின் பின்னர் இணைந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் புலிகளுடனேயே இணைந்திருக்கிறார்கள். புலம்பெயர் நாடுகளாகட்டும், இந்திய உணர்வாளர்களாகட்டும், இலங்கையின் எல்லைக்குள்ளாகட்டும் புலிகள் என்பதைத் தவிர வேறு தெரிவு இல்லாத நிலையை புலிகள் ஏற்படுத்தியிருந்தார்கள்.
இந்தச் சூழலில் புலிகளோடு இணைந்து கொண்ட அல்லது ஆதரவு வழங்கிய பெரும்பாலானோர் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வின் அடிப்படையிலேயே இணைந்து கொண்டனர்.
இவர்கள் அன்னியப்படுத்தப்பட வேண்டியவர்களல்ல.
போராட்டத்தின் சரியான திசைவழியை நோக்கி இணைத்துக்கொள்ளப்பட வேண்டியவர்கள். அரச வலைப்பின்னல்களினதும் சீரழிவு வாதிகளதும் அவதூறு வடிவிலான பிரசாரமானது இவர்களைத் திட்டமிட்டோ அல்லது அறியாமலோ அன்னியப்படுத்தும் செயற்பாட்டையே மேற்கொண்டுவருகிறது.
தவறான போராட்டம் அழிந்து சிதைந்து போன வரலாறு ஒரு புறமிருக்க அந்த அழிவும் போராட்ட வழிமுறையும் மக்கள் மத்தியில் பாரிய வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அலவத்துள் வாழும் மக்கள் மத்தியில் இவ்வெறுப்புணர்வு சிறிய அளவிலான எதிர்ப்பியக்கங்கள் கூட உடனடியாக உருவாக முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளது.
இந்த நிலையில், புலிகளின் மீதான அரசியலற்ற தாக்குதல்கள் தேசிய இன அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் மக்களையும், தேசிய உணர்வுகொண்ட ஏனைய சக்திகளையும் அன்னிமாக்கும் நிகழ்ச்சிப் போக்கையே கொண்டுள்ளது.
இரண்டாவது வகையினர் புலிகளின் கடந்தகால அரசியல் மீதான விமர்சனத்தை முன்வைக்கின்றனர். புலிகளினதும் பிரபாகரானதும் அரசியல் ஏற்படுத்திய அழிவுகளின் பின்னணியிலிருந்த அரசியல் அதன் எதிர் விளைவுகள் என்பன பற்றிப் பேசுவது இன்றயை சிக்கலான காலத்தின் அவசியமான ஒன்றாகும்.
முதலில் புலிகளின் தவறான அரசியல் வழிமுறை வெற்றிகொள்ளப்பட வேண்டிய போராட்டத்தை நீண்ட பல ஆண்டுகளுக்குப் பின்நகர்த்தியுள்ளது. தேச உருவாக்கத்தை இன்று கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மக்களைப் போராட்டங்களின் மீது விரக்திகொள்ளச் செய்திருக்கிறது.
புலிகளின் அரசியற் தவறு குறித்த கற்கை இன்று அவசியமாகிறது. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் அனைத்துத் தளத்திலும் அவசியமானது என்பதை உணர்ந்துகொள்வதும், புலிகளதும், பிரபாகரனதும் அரசியற் தவறுக்கான ஊற்று மூலத்தைக் கண்டறிவதும் அவசியமானது .
பிரபாகரன் தியாகியா துரோகியா என்பதல்ல இங்கு விவாதப் பொருள். பிரபாகரனின் எந்த அரசியல் வழிமுறை அவரை தவறான போராட்ட வழிமுறையின் தலைவராக மாற்றியது என்பதே அவசியமானது.
ஆரம்பத்திலிருந்தே போராட்டம் அழிந்துபோவதற்கான கட்டமைப்புக்களையே உள்வாங்கி வழி நடத்தப்பட்டது என்பதற்கான அரசியல் கண்டறியப்பட வேண்டும்.
உலக ஒழுங்கு மாற்றமடைந்த வேளையில் பிரபாகரன் தலைமை வகித்த இராணுவம் அழிக்கப்பட்டது என்பது ஒரு வகையான வாதம். உலகம் மாற்றமடைந்த வேளையில், ஏகபோகங்களின் ஒழுங்கு மறுசீரமைக்கப்பட்ட வேளையில் போராட்டத்தை இலகுவாக அழிக்கக் கூடிய வகையில் எங்கே தவறிழைக்கப்ப்பட்டது எனபது ஆராயப்பட வேண்டும். போராட்டத்தின் பேரால் அழிக்கப்பட்ட ஆயிரமாயிரம் அப்பாவிகளின், மக்களை நேசித்தவர்களின் வாழ்வு “சரியான வழிமுறைகளைக் கண்டறிவதற்கான விமர்சனம்” என்ற முழக்கத்தின் மீதே அர்த்தமுடையதாகும்.

நன்றி : அஜித்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி