திரையுலகம்,முதன்மை செய்திகள் இலங்கையில் எந்திரன்… 'விஷமப் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்!'

இலங்கையில் எந்திரன்… 'விஷமப் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்!'

enthiran

இலங்கையில் எந்திரன் திரைப்படத்துக்கு பார்வையாளர் கூட்டம் குறைந்துவிட்டது என்ற நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அது வெறும் விஷமப் பிரச்சாரமே என்று சன் பிக்ஸர்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்திரன் அதிக வசூலுடன் மூன்றாவது வாரமும் தொடர்வதாக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்தும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தங்கள் திரையரங்குகளில் எந்திரனுக்கு கூட்டமில்லை என்று தியாகராஜா என்பவர் கூறியதாக எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் அதுபோல தான் யாரிடமும் கூறவில்லை என்றும், மூன்றாவது வாரம் வரை கூட்டம் தொடர்கிறது. இனி வரும் வாரங்களில் இதே நிலை தொடருமா தெரியவில்லை என்றே கூறியதாவும் தெரிவித்துள்ளார்.

“உண்மையில் இதுவே பெரிய சாதனைதான். ஒரே இடத்தில் இரண்டு திரையரங்குகளில் தொடர்ந்து மூன்று வாரங்கள் ஒரு படம் ஓடுவது சாதாரண விஷயமல்ல”, என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்புவில் சிங்களர்களும் அதிகம் விரும்பிப் பார்க்கும் படமாக எந்திரன் உள்ளது. ஆங்கிலப் படத்துக்குக்கூட இல்லாத அளவுக்கு, ஆங்கில சப் டைட்டிலுடன் கூடிய எந்திரனை சிங்களர்கள் கண்டு ரசிப்பதாக தெரிவித்துள்ளார் சினிசிட்டி காம்ப்ளெக்ஸ் நிர்வாகி. இந்த அரங்கில் முதல் நாள் மட்டுமே 12000 பேர் எந்திரனைப் பார்த்துள்ளனர். இது ஒரு புதிய சாதனை என்கிறார்கள். இன்றும் மாலைக் காட்சிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டு, திருகோணமலைப் பகுதியிலும் தமிழர்- சிங்களர் விரும்பிப் பார்க்கும் படமாக எந்திரன் உள்ளது.

“எந்திரனுக்கு எதிராக சிலர் செய்யும் விஷமம் பிரச்சாரத்தின் ஒரு பகுதிதான், இத்தகைய எதிர்மறைச் செய்திகள். இதனை நம்புவதும் விட்டுவிடுவதும் அவரவர் விருப்பம். நாங்கள் இதுகுறித்து பேசுவதைக் கூட விரும்பவில்லை. எந்திரன் உலகம் முழுவதும் பெற்றுள்ள பிரமாண்ட வெற்றி திரையுலகம் அறியும். இந்திய சினிமா வரலாற்றில் ‘ஆல்டைம் பிளாக்பஸ்டர்’ என்றால் அது எந்திரன் மட்டுமே,” என்றார் சன் பிக்ஸர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி