அரசியல் ராமர் கோவில் கட்ட 67 ஏக்கர் நிலம் கேட்கும் கல்யாண் சிங்-பிரதமருக்குக் கடிதம்

ராமர் கோவில் கட்ட 67 ஏக்கர் நிலம் கேட்கும் கல்யாண் சிங்-பிரதமருக்குக் கடிதம்

kalyan

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக, மத்திய அரசு முன்பு கையகப்படுத்திய 67 ஏக்கர் நிலத்தை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார் முன்னாள் உ.பி. முதல்வர் கல்யாண் சிங்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அயோத்தியில், மத்திய அரசு கையகப்படுத்தியுள்ள 67 ஏக்கர் நிலம் தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை. எனவே இதை ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு திருப்பித் தர வேண்டும்.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று கடிதம் எழுதியுள்ளேன். தற்போது அயோத்தி விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு 1500 சதுர அடி நிலத்திற்கு மட்டுமே பொருந்தும். இந்த நிலத்தை மூன்றாக பங்கு போட்டால், ராமர் கோவில் கட்டுவதற்கு வெறும் 500 சதுர அடிதான் கிடைக்கும். இதை வைத்து கோவில் கட்ட முடியாது. எனவே 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்றார் கல்யாண் சிங்.

1992ம் ஆண்டு பாபர் மசூதியை சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த கரசேவகர்கள் இடித்தபோது முதல்வராக இருந்தவர் கல்யாண் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றிலும் உள்ள 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது. அந்த நிலத்தைத்தான் தற்போது ராமர் கோவிலுக்காக கேட்கிறார் கல்யாண் சிங்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி