அரசியல்,முதன்மை செய்திகள் விருந்தைப் புறக்கணித்த உலகத் தலைவர்கள்… காலி அரங்கத்தில் பேசிய ராஜபக்சே

விருந்தைப் புறக்கணித்த உலகத் தலைவர்கள்… காலி அரங்கத்தில் பேசிய ராஜபக்சே

Rajabakshea

ஐநா சபையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பேசிய போது உலகத் தலைவர்கள் பலர் புறக்கணித்துவிட்டதாகவும், இதனால் அவர் காலி அரங்கில் உரை நிகழ்த்தியதாகவும் சிங்கள ஊடகம் அம்பலப்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சர்வதேச அரங்கில் ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் இது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டார் ராஜபக்சே. இந்த நிகழ்வின் போது இலங்கை அதிபரை, உலகத் தலைவர்கள் எவரும் சந்திக்க ஆர்வம் காட்டவில்லை.

இந்த மாநாட்டையொட்டி இலங்கை ஒரு பெரிய விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொள்ள 100 நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் ராஜபக்சே. ஆனால் ஒரே நாட்டு தலைவர் மட்டுமே விருந்துக்கு வந்திருந்தார். அவர் ஈரானின் முகமது அகமத் நிஜாதீன். தேர்தலில் பெரும் மோசடி செய்து ஆட்சியைப் பிடித்தவர் என்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ளவர் இந்த முகமத் என்பது குறிப்பிடத்தக்கது. விருந்து வந்த அவரும் கூட மூன்றே நிமிடம் மட்டும்தான் இருந்தாராம். சாப்பிடாமல் வெளியேறியுள்ளார் அவர்.

இலங்கையைத் தாங்கிப் பிடித்து, அதன் போர்க்குற்றத்தை மறைக்க உதவும் இந்தியா, சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகள் கூட இந்த விருந்தைப் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

கடைசியில் ராஜபக்சேயுடன் பயணம் செய்திருந்த இலங்கை அரசின் 110 பேர் கொண்ட சிங்கள அதிகாரிகள் குழுதான் இந்த விருந்தைச் சாப்பிட்டு முடித்ததாம்.

இலங்கைக்கு இதுவரை இல்லாத பெரும் அவமதிப்பு இது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

அதேபோல, ஐநா சபையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பேசிய போது தலைவர்கள் அனைவரும் வந்திருந்ததால் அரங்கம் நிரம்பி வழிந்தது. ராஜபக்சே பேசியபோது, அரங்கமே கிட்டத்தட்ட காலியாகிவிட்டிருந்தது. ராஜபக்சேயுடன் இணைந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளக் கூட யாரும் ஆர்வம் காட்டவில்லையாம்.

130 பேருடன் (காக்டெயில் பரிமாற மட்டுமே 5 பேராம்) அமெரிக்கா சென்ற ராஜபக்சேயின் இந்தப் பயணத்துக்கான செலவு மட்டும் 140 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி