திரையுலகம் வானம் பிரஸ் மீட் – சிம்புவின் வாயை கிளறிய நிருபர்கள்

வானம் பிரஸ் மீட் – சிம்புவின் வாயை கிளறிய நிருபர்கள்

simbu

“வானம் படத்தின் நடிகர்கள் – தொழில்நுட்பக் கலைஞர்கள் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். சிலம்பரசன், அனுஷ்கா, வேகா, சோனியா அகர்வால், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் கிரிஷ், பட அதிபர் வி.டி.வி.கணேஷ் மற்றும் படக்குழுவினர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுப் பேசினர்.

படம் குறித்தும் படத்தின் நாயகி குறித்தும் சிம்பு கூறுகையில் :

“விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளிவந்த பிறகு 150 நாட்கள் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் சும்மா உட்கார்ந்திருந்தேன். நடுவில் நான் ஒப்புக்கொண்ட “கோ பட விவகாரம் உங்களுக்கே தெரியும். “போடா போடி படப்பிடிப்பும் தள்ளிப்போய் விட்டது.

அப்போதுதான் அல்லு அர்ஜுன் நடித்த “வேதம் என்ற தெலுங்கு படத்தை பார்த்தேன். வித்தியாசமான படம். மிக அருமையான திரைக்கதை. பாதி படம் பார்த்தபோதே இந்த படத்தை தமிழில் நாம் பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்தேன். என் நண்பர் கணேஷ் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார்.

படத்தில் பரத், அனுஷ்கா, வேகா, சோனியா அகர்வால் என்று நட்சத்திர கூட்டம் நிறைய இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் ஈடுகட்டும். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வேறு ஒரு சிலம்பரசனை பார்த்தது போல், ‘வானம் படத்தில் இன்னொரு சிலம்பரசனை பார்க்கலாம்… என்றார்.

உங்களை விட அனுஷ்கா உயரமானவர் என்கிறார்களே, என்று ஒரு நிருபர் கேட்க, “அது குள்ளமானவர்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி ( சூர்யாவை கலாய்க்கிறாராம் ). நான் வேண்டுமானால் பக்கத்தில் நிற்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள்… என்று கூறிய சிம்பு, அனுஷ்காவை அழைத்து பக்கத்தில் நின்று காட்டினார். சிம்பு உயரமாகத்தான் இருந்தார்.

அடுத்து “நீங்கள் அனுஷ்காவின் ரசிகர் என்கிறீர்கள். மற்ற கதாநாயகிகளிடம் இல்லாத அம்சம் அனுஷ்காவிடம் இருப்பதாக நினைக்கிறீர்களா? என்று சிம்புவின் வாயைக் கிளறினார் இன்னொரு நிருபர்.

அதற்கு சிம்பு சொன்ன பதில் :

“நான் அவ்வளவு எளிதில் யாருடைய ரசிகராகவும் மாற மாட்டேன். முன்பு ஜோதிகாவின் ரசிகராக இருந்தேன். ‘அருந்ததி படம் பார்த்ததில் இருந்து அனுஷ்காவின் ரசிகராக மாறிவிட்டேன். பொதுவாக ஒரு படத்தை கதாநாயகன்தான் தோளில் தூக்கி சுமப்பார். ஆனால், ஒரு முழு படத்தையும் கதாநாயகி அனுஷ்கா தோளில் தூக்கி சுமந்திருந்தார். அதனால்தான் நான் அனுஷ்காவின் ரசிகராக மாறினேன்… என்றார்.

ஒரு நடிகையை அழைத்துப்போய் “இவளைத்தான் நான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். ஆசீர்வாதம் செய் என்று உங்கள் அம்மாவிடம் சொன்னதாக ஒரு தகவல் பரவியதே, உண்மையா என்ற கேள்விக்கு, “ஏங்க… இதெல்லாம் ஓவர். அப்படி யாரையும் நான் அழைத்துப்போகவில்லை. அது வெறும் வதந்தி… என்றார்.

வானம் படத்தில் பரத்துடன் சேர்ந்து நடிக்கிறார் சிம்பு. இதே போல தனுஷுடன் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து நடிப்பேன். அதில் தயக்கமில்லை, என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி